Published : 24 Dec 2014 10:40 AM
Last Updated : 24 Dec 2014 10:40 AM
மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத்தை ‘சாஹிப்' என மரியாதையுடன் ஐ.நா. சபை குறிப்பிட்டதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து அதற்காக வருத்தம் தெரிவித்த ஐ.நா., ‘சாஹிப்' என தீவிரவாதியை அழைத்ததை திரும்பப் பெற்றுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் கேரி கிலான் கடந்த 17-ம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பா குறித்தும், அதன் தலைவரான ஹபீஸ் சயீத் குறித்தும் சில தகவல்களைத் தெரிவித்திருந்தார்.
அல்-காய்தா பயங்கரவாத அமைப்புடனும், அதனுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பாக ஐ.நா. நிறைவேற்றிய தீர்மானங்கள் தொடர்பான விஷயங்களும் அந்த செய்திக்குறிப்பில் இடம் பெற்றிருந்தன.
அதில், ஹபீஸ் சயீத்தை ‘சாஹிப்' என்று மரியாதையுடன் கேரி கிலான் குறிப்பிட்டிருந்தார். தீவிரவாதியான சயீதை இவ்வாறு குறிப்பிட்டது தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கு கடிதம் எழுதப்பட்டது. இதையடுத்து தனது தவறை உணர்ந்து கொண்ட ஐ.நா. அதற்காக வருத்தம் தெரிவித்ததுடன், ஹபீஸ் சயீத்தை சாஹிப் என அழைத்ததையும் திரும்பப் பெற்றது.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை 2008-ம் டிசம்பரில் ஐ.நா. தடை செய்தது. ஆனால் அந்த அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத் இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வருவதுடன், பொதுக் கூட்டங்களில் பங்கேற்று இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் பேசி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT