Published : 24 Nov 2014 12:58 PM
Last Updated : 24 Nov 2014 12:58 PM
அமெரிக்காவில் பொம்மை துப்பாக்கியுடன் மைதானத்தில் விளையாடிய சிறுவனை அந்நாட்டுப் போலீஸார் தவறுதலாக சுட்டுகொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கிலீவலாந்தில் பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்த 12 வயதுச் சிறுவன் கையில் துப்பாக்கி இருப்பதாக அடையாளம் தெரியாத நபர் போலீஸாருக்கு தகவல் அளித்தார். இதனை அடுத்து அங்கிருந்த ஓஹியோ மாகாண போலீஸார் சிறுவனை நோக்கி தங்களது துப்பாக்கியை உயர்த்தி கையை உயர்த்துமாறு ஆணையிட்டனர்.
விவரம் அறியாத சிறுவன் போலீஸார் கூறியது போல செய்யாத நிலையில், சிறுவனை நோக்கி போலீஸார் சுட்டனர். இதில் 2 குண்டுகள் சிறுவனின் வயிற்றில் பாய்ந்தது. அப்போது சிறுவன் கையில் இருந்த துப்பாக்கியை பார்த்தபோது, அதுவெறும் ஏர் கன் எனப்படும் விளையாட்டுத் துப்பாக்கி என்று தெரிய வந்தது.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பலியான சிறுவனின் பெயர் டாமிர் ரைஸ் என்றும், அந்த மைதானத்தில் சிறுவன் விளையாட வருவது வழக்கமானது என்றும் மைதானத்துக்கு நடைப்பயிற்சிக்கு வருபவர்கள் தெரிவித்துள்ளனர். போலீஸாரின் தவறுதலான முடிவால் அப்பாவி சிறுவன் உயிரிழந்தது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக ஆங்காங்கே தனி நபர்கள் நடத்தும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மக்களிடையே பீதியையும் அரசுக்கு நெருக்கடியையும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவர்கள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை அடுத்து இது தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதன் அடிப்படையிலே எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT