Published : 02 Jul 2019 02:47 PM
Last Updated : 02 Jul 2019 02:47 PM
ஈரான் நெருப்புடன் விளையாடுகிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளில், தங்களிடம் குறிப்பிட்ட அளவு யுரேனியத்தைதான் வைத்திருக்க வேண்டும் என்ற வரம்பை ஈரான் மீறியதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இதனை ஈரான் உறுதிப்படுத்தியது.
இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் திங்கட்கிழமை கூறும்போது, ''அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் யாருடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் நெருப்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.
ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா மோதல் வலுத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT