Published : 05 Aug 2017 10:29 AM
Last Updated : 05 Aug 2017 10:29 AM
ப
னாமா நாட்டில் வசிக்கும் 12 வயது சிறுவன் எஸ்ரா டோர்மன், சிறந்த டாட்டூ கலைஞராக ஆச்சரியப்படுத்துகிறார். இவரிடம் டாட்டூ போட்டுக்கொள்வதற்காக ஏராளமானவர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள்! பொதுவாக டாட்டூ போடும் இடங்களில் குழந்தைகளை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் ஹோனோலுலு டாட்டூ கடையை இவரின் பெற்றோர்கள்தான் நடத்துகிறார்கள். அதனால் அடிக்கடி கடைக்கு வந்து அவர்கள் வரையும் டாட்டூகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார். “ஒரு சிறுவனிடம் காத்திருந்து டாட்டூ போட்டுக் கொண்டாயே, பயமாக இல்லையா என்று என் நண்பர்கள் கேட்டார்கள். பல வருடங்கள் பயிற்சி பெற்ற டாட்டூ கலைஞரைப்போல் அத்தனை நேர்த்தியாக வரைகிறார் டோர்மன். அவர் வரையும்போது வலி தெரியவில்லை. ஏதோ மேஜிக் போல இருந்தது. சின்ன விரல்கள் எவ்வளவு அழகாக வரைகின்றன! மிகச் சிறப்பாக ஒரு விஷயத்தைச் செய்யும்போது சிறுவர்கள், பெரியவர்கள் என்ற வித்தியாசம் பார்க்க வேண்டியதில்லை” என்கிறார் ரோசா. “ஒருநாள் பொழுது போகாமல் கடையில் உட்கார்ந்து ஒரு படம் வரைந்து காட்டினேன். என் பெற்றோர் உட்பட பலரும் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். எங்கள் கடையில் வேலை செய்யும் டாட்டூ கலைஞர், நீ டாட்டூ வரைய முயற்சி செய்யலாமே என்றார். உடனே என் அம்மாவுக்குச் சிறிய பூவும் இலைகளும் கொண்ட டாட்டூவை வரைந்தேன். அதைப் பார்த்தவர்கள் நன்கு பயிற்சி பெற்ற டாட்டூ கலைஞர் போலவே நேர்த்தியாக வரைந்திருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அன்றிலிருந்து ஓய்வு நேரங்களில் டாட்டூ வரைய ஆரம்பித்துவிட்டேன். பாதித் தோல் வரைதான் மையைக் கொண்டு செல்ல வேண்டும், சுத்தம் பேண வேண்டும் என்ற விதிமுறைகளை எல்லாம் விரைவில் கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் தயங்கியவர்கள் இன்று என்னிடம் டாட்டூ போட்டுக்கொள்வதற்காகக் காத்திருக்கிறார்கள். பனாமா நகரில் நான் புகழ்பெற்ற டாட்டூ கலைஞர்களில் ஒருவனானதில் என் பெற்றோருக்கு மகிழ்ச்சி. எந்த வேலையைச் செய்தாலும் சிறப்பாகச் செய்தால், வெற்றி நிச்சயம் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்துகொண்டேன். நான் விரும்பியதைச் செய்ய அனுமதித்தாலும் என் பெற்றோர், சின்ன வயது என்பதால் படிப்பில் கவனம் செலுத்தச் சொல்கிறார்கள்” என்கிறார் டோர்மன்.
உலகின் மிக இளமையான டாட்டூ கலைஞருக்கு வாழ்த்துகள்.
ஆ
ஸ்திரேலியாவைச் சேர்ந்த காலி லோரிடாஸ், செல்லப் பிராணிகளுக்கான சலூன் நடத்திவருகிறார். சமீபத்தில் செல்லப் பிராணிகளுக்கான செயற்கை நகங்களை விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார். “பூனை, நாய் போன்றவற்றின் நகங்கள் சோஃபா குஷன்களைக் கிழித்துவிடுகின்றன. மனிதர்கள் மீது படும்போது காயம் ஏற்படுகிறது. இதற்காக மருத்துவரிடமும் செல்ல நேரிடுகிறது. அதனால்தான் செல்லப் பிராணிகளின் நகங்களை வெட்டிவிட்டு, செயற்கை நகங்களை மாட்டிவிடுகிறேன். இதனால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் கிடையாது. 40 வண்ணங்களில் கிடைக்கும் இந்த நகங்களுக்கு 8 வாரங்கள் வரை உத்திரவாதம் அளிக்கிறேன்” என்கிறார் காலி லோரிடாஸ்.
ம்… இன்னும் என்னவெல்லாம் வருமோ!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT