Published : 13 Aug 2017 11:45 AM
Last Updated : 13 Aug 2017 11:45 AM

நாடாளுமன்ற இடைத்தேர்தலில் நவாஸ் மனைவி வெற்றி பெறுவாரா?

பாகிஸ்தான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீபின் மனைவி கல்சூம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்தத் தேர்தலில் அவர் கடும் போட்டியை சந்திக்கக்கூடும் என்று தெரிகிறது.

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு காரணமாக நவாஸ் ஷெரீப் அண்மையில் பிரதமர் பதவியை இழந்தார். இதன்காரணமாக அவரது என்ஏ-120 தொகுதி காலியாக உள்ளது. லாகூர் பகுதிகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதிக்கு செப்டம்பர் 17-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் சார்பில் நவாஸ் ஷெரீபின் மனைவி கல்சூம் நேற்றுமுன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதேதொகுதியில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ-இன்சாப் கட்சியின் சார்பில் யாஸ்மின் ரஷீத் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

கல்சூமுக்கும் யாஸ்மினுக்கும் இடையே கடும் போட்டி நிலவக்கூடும். இதில் யார் வெற்றி பெறுவார் என்பதை இப்போதே கணிக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

என்ஏ-120 தொகுதியில் நவாஸின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியிட்டு நாட்டின் நிரந்தர பிரதமராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக ஷாபாஸ் ஓரங்கட்டப்பட்டு நவாஸின் மனைவி கல்சூம் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

தற்போது பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி உள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவரே பிரதமராக நீடிக்கக்கூடும். இல்லையெனில் இடைத்தேர்தலில் கல்சூம் வெற்றி பெற்றால் அவர் பிரதமராக பதவியேற்கக்கூடும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x