Published : 29 Aug 2017 10:10 AM
Last Updated : 29 Aug 2017 10:10 AM
தலிபான் அமைப்பின் மூத்த தலைவர்கள் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளனர் என்று அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் பிராந்திய ராணுவ தளபதி ஜெனரல் ஜான் நிக்கல்சன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க கடற்படை வீரர்கள் கடந்த 2011 மே 2-ம் தேதி சுட்டுக் கொன்றனர். அல்காய்தா, தலிபான்கள், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என்று அமெரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் பிராந்திய ராணுவ தளபதி ஜெனரல் ஜான் நிக்கல்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது: தலிபான் அமைப்பின் மூத்த தலைவர்கள் பாகிஸ்தானின் பெஷாவர், குவெட்டா நகரங்களில் பதுங்கியுள்ளனர். அவர்களை கைது செய்யும்படி பாகிஸ்தானுக்கு அழுத்தம் அளித்து வருகிறோம். தலிபான்களுக்கு புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தினால்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து தீவிரவாதத்தை வேரறுக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்க தளபதியின் குற்றச்சாட்டு குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஆசன் இக்பால் கூறியபோது, ஆப்கானிஸ்தானின் 40 சதவீத பகுதி தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குதான் தலிபான்கள் பதுங்கியுள்ளனர். பாகிஸ்தானில் தலிபான் தலைவர்கள் யாரும் இல்லை. அமெரிக்க அதிகாரிகள் ஆதாரமின்றி குற்றம்சாட்டக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் கடந்த 16 ஆண்டுகளாக நடைபெறும் போரில் அமெரிக்கா தோல்வி அடைந்துள்ளது. அதை மறைக்க பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டுகிறது. அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்ததால் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்களை நம்பவில்லை என்றால் பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளைத் திரும்ப அழைத்துக் கொள்ள அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு இடையிலான உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவின் உறவை துண்டித்துக் கொள்ள பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருப்பதாக இஸ்லாமாபாத் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT