Published : 31 Jul 2017 01:09 PM
Last Updated : 31 Jul 2017 01:09 PM
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா நாடுகளுக்கு மட்டுமல்லாமல் இன்னும் பிற நாடுகளுக்கும் ஒரு பயங்கரமான அச்சுறுத்தல். வட கொரியாவின் இந்த அச்சுறுத்தல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பும், ஜப்பான் அதிபர் அபேவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவும் வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை குறித்து தொலைபேசி வாயிலாக பேசினர்.
அதில் வடகொரியாவின் இந்த நடவடிக்கை வளர்ந்து வரும் பயங்கரமான நேரடி அச்சுறுத்தலை காட்டுகிறது என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
மேலும் வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரித்து இதனை பிற நாடுகளும் பின்பற்ற வைப்பது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
மேலும், வடகொரியாவின் தாக்குதலில் இருந்து தென் கொரியா மற்றும் ஜப்பானை பாதுகாக்க அமெரிக்கா தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் உறுதியளித்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா வெள்ளிக்கிழமை ஹுவாசாங்-14 என்ற ஏவுகணை சோதனையை நடத்தியது.
இந்த ஏவுகணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ போன்ற பெரிய நகரங்களை தாக்க வல்லது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்தார். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT