Published : 05 Jan 2014 12:42 PM
Last Updated : 05 Jan 2014 12:42 PM

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் வன்முறை: 21 பேர் பலி

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வாக்குப் பதிவை ரத்து செய்ய வேண்டும், அரசியல் கட்சிகள் சாராத இடைக்கால அரசின் தலைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வங்கதேச தேசியவாதக் கட்சி, ஜமாத் இ இஸ்லாமி கட்சி ஆகியவை போராட்டம் நடத்தி வந்தன.

எனினும், திட்டமிட்டபடி தேர்தல் நடை பெறும் என்று தேர்தல் ஆணையமும், அரசும் அறிவித்துவிட்டன. இதனால், வங்கதேச தேசியவாதக் கட்சி தலைமையில் 18 கட்சிகள் தேர்தலை புறக்கணித்துவிட்டன. ஆளும் அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், சுயேச்சைகளும் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டன.

மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 153-ல் ஆளும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்படவுள்ளனர். மீதமுள்ள 147 தொகுதிகளில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. துணை ராணுவப் படையினர், அதிரடிப் படையினர் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

200 வாக்குச்சாவடிகளில் தீவைப்பு, வாக்குச்சீட்டுப் பறிப்பு உள்ளிட்ட செயல்களில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டனர். இதனால், அங்கு வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டது. பல இடங்களில் வாகனங்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். சில இடங்களில் நாட்டு வெடி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். இந்த தேர்தல் வன்முறையில் 21 பேர் பலியாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x