Published : 29 Jul 2016 10:31 AM
Last Updated : 29 Jul 2016 10:31 AM

இந்தோனேசியாவில் இந்தியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்தியர் உட்பட 14 பேருக்கு நேற்றிரவு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம், மெஹத்பூர் நகரைச் சேர்ந்தவர் குர்திப் சிங் (48). அவர் கடந்த 2004-ம் ஆண்டில் இந்தோனேசியாவின் பாண்டன் பகுதியில் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருக்கு 2005-ம் ஆண்டில் உள்ளூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அந்த நாட்டு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்திலும் அவரது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது.

மேலும் இந்தோனேசியாவை சேர்ந்த 4 பேர், நைஜீரியாவை சேர்ந்த 6 பேர், ஜிம்பாப்வேவை சேர்ந்த 2 பேர், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருக்கும் போதை கடத்தல் வழக்குகளில் அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் 14 பேரின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இந்தோனேசிய அரசிடம் கோரிக்கை விடுத்தன. ஆனால் அதனை அந்த நாட்டு அரசு ஏற்கவில்லை.

இந்நிலையில், இந்தியர் குர்திப் சிங் உட்பட 14 பேருக்கும் மத்திய ஜாவா, சிலாகேப் தீவு, நுசாகம்பங்கன் சிறையில் நேற்று இரவு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 14 பேரும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்

குர்திப் சிங் குடும்பம்

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட குர்திப் சிங்கின் மனைவி குல்விந்தர் சிங் கூறியதாவது: நானும் எனது மகள் மன்ஜித் கவுர், மகன் சுக்பிர் சிங் ஆகியோர் அநாதையாகி உள்ளோம். எனது கணவர் நியூசிலாந்தில் ஓட்டுநர் வேலை தேடி சென்றார். வேலைவாய்ப்பு நிறுவன முகவரின் சதியால் இந்தோனேசியாவில் வழக்கில் சிக்கி உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x