Published : 16 Jan 2014 01:24 PM
Last Updated : 16 Jan 2014 01:24 PM

எகிப்தில் அரசமைப்புச் சாசன ஒப்புதல் பெற பொது வாக்கெடுப்பு

எகிப்தில் புதிய அரசமைப்பு சாசன சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்கான பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு முன்னாள் அதிபர் முகமது மோர்ஸி ஆதரவு இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வாக்கெடுப்பை புறக்கணிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியது. இதையடுத்து நிகழ்ந்த வன்முறையில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

எகிப்தில் முகமது மோர்ஸி அதிபராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட அரசமைப்புச் சாசன சட்டத்தில் மத ரீதியான அம்சங்கள் அதிகம் இடம்பெற்றிருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினரும், மதச்சார் பற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போராட்டம் வலுவடைந்ததையடுத்து 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் மோர்ஸியை ஆட்சியிலிருந்து ராணுவம் அகற்றியது. இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை பயங்கரவாத இயக்கமாக எகிப்து அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், புதிய அரசமைப்பு சாசனம் உருவாக்கப்பட்டு, மக்களின் ஒப்புதலைப் பெற பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் மக்கள் பலர் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

அதே சமயம் வாக்காளர்களை தடுக்கும் வகையில் மோர்ஸியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். வாக்கெடுப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயே கெய்ரோவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. எனினும், இதில் யாரும் காயமடையவில்லை. அந்நகரின் மற்றொரு பகுதியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். சோகாக் நகரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த போராட்டங்களில் 8 பேர் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். புதிய அரசமைப்புச் சட்டத்தில் பல்வேறு புதிய ஷரத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி மதம் சார்ந்த கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சம உரிமை, சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்தல், பாதுகாப்புத் துறை அமைச்சரை ராணுவமே தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதி அளித்தல், அந்த அமைச்சரின் பதவிக்காலத்தை 8 ஆண்டுகளாக அதிகரித்தல் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

இந்த அரசமைப்புச் சாசனத் துக்கு மக்கள் ஒப்புதல் அளித் தால், விரைவில் அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடத் தப்படும். இந்த தேர்தலில் ராணுவத் தலைமைத் தளபதி அல் – சிசி போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x