Published : 20 Mar 2014 12:00 AM
Last Updated : 20 Mar 2014 12:00 AM

ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை ஆதரிக்க மாட்டோம்: இந்தியா திட்டவட்டம்

கிரிமியா விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை ஆதரிக்க மாட்டோம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த இணைப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக உள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகளின் மீது பொருளாதாரத் தடைகளை (சொத்துகளை முடக்குதல்) கொண்டு வரவும், விசா உள்ளிட்டவற்றை வழங்காமல் நிறுத்திவைக்கவும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை இந்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. அதில், “தனியொரு நாட்டுக்கு எதிராக தடைகளை கொண்டு வருவதை இந்தியா ஒருபோதும் ஆதரித்தது இல்லை. ஈராக், ஈரான் நாடுகள் மீது தடை கொண்டு வரப்பட்டபோதும், அதை இந்தியா முழுமையாக ஆதரிக்கவில்லை. எனவே, ஒரு நாட்டின் மீது பிற நாடுகள் கொண்டு வரும் தடைகளை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.

ரஷ்யா விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பது தொடர்பாக நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மையானோர், ரஷ்யாவுடன் சேர்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x