Published : 03 Jan 2016 12:03 PM
Last Updated : 03 Jan 2016 12:03 PM
உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் என்று ஜப்பான் பேரரசர் அகிஹிடோ (82) தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
டோக்கியோவில் உள்ள அரண்மனையில் வசித்து வரும் அகிஹிடோ, புத்தாண்டை முன்னிட்டு நேற்று 5 முறை பொது மக்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, காலையில் அங்கு திரண்ட ஆயிரக் கணக்கான பொதுமக்கள் முன்பு, குண்டு துளைக்காத கண்ணாடிக்கு பின்பு மாடியிலிருந்தபடி தோன்றி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அவருடன் இருந்த பேரரசி மிச்சிகோ, மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் பொதுமக்களைப் பார்த்து கையசைத்தனர். பின்னர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அவர் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு ஜப்பான் பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி மற்றும் அணு உலை விபத்து காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இன்னமும் முகாம்களில் வசித்து வருவது கவலை அளிக்கிறது. இவர்கள் விரைவில் சொந்த வீட்டுக்கு திரும்ப வேண்டும்.
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், நம் நாட்டிலும் உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காலையில் மட்டும் சுமார் 44 ஆயிரம் பேர் பேரரசர் வீட்டு முன்பு திரண்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT