Published : 29 Dec 2013 12:00 AM
Last Updated : 29 Dec 2013 12:00 AM

இலங்கை போர்க்குற்றம்: சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு

விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2009ல் இலங்கை ராணுவம் மேற்கொண்ட இறுதிக்கட்டப் போரின்போது கொடூரங்கள் நடந்ததாக கூறப்படும் புகார்கள் பற்றி சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது .

வரும் மார்ச்சில் நடக்கும் ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினை பற்றி புதிய தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இந்நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியதாவது:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர், இலங்கையின் போர்க்குற்றம் பற்றி சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டியதன் அவசி யத்தை சர்வதேச மற்றும் தூதரக சமூகங்களிடம் எடுத்துரைக்கும்.

ஐ.நா. மனித உரிமைகள் சபை அமைந்துள்ள வளாகத்தில் கவன ஈர்ப்புப் போராட்டத்தையும், கட்சி நடத்தவுள்ளது. இம் முறை எமது பிரச்சாரத்தை தீவிரப் படுத்தவுள்ளோம். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஏற்கனவே இரண்டு தடவை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை நிறைவேற்றத் தவறியதால் மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானம் நிறைவேற்றப்படும் என நம்புகின்றோம் என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

இதற்கிடையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திட்டத்தை இலங்கை நிராகரித்தது. இதுபற்றி அரசின் செய்தித் தொடர்பாளரும் தகவல் துறை அமைச்சருமான கெகலியா ரம்புகவெல்ல கூறியதாவது:

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்துபோன நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவு அதன் பிரிவினைவாத நோக்கத்தை பிரதிபலிக்கிறது. அதன் திட்டத்தை இலங்கை நிராகரிக்கிறது. அந்த கட்சியிடமிருந்து இத்தகைய முடிவு வந்துள்ளது புதிதல்ல.

விடுதலைப்புலிகள் இயக்கத்து டன் கைகோத்து செயல்பட்டதுதானே அந்த கட்சி. இலங்கைக்கு எதிராக உலக நாடுகளை அணுகாமல் உள் நாட்டுக்குள்ளேயே பிரச்சினைக்குத் தீர்வு காணவே அவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றார் ரம்புகவெல்ல.

சிறுபான்மை தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐநா மனித உரிமை அமைப்பின் இரு தீர்மானங்கள் இலங்கையை ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளதுடன் மனித உரிமை மீறல் புகார் விஷயத்தில் பொருட்படுத்தாமல் இருப்பதற்காக கண்டித்தும் உள்ளன.

நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை இலங்கை அமல் படுத்தாமல் காலம் தள்ளுகிறது என்று தமிழர்களும் சர்வதேச சமுதாயமும் இலங்கை மீது குற்றம்சாட்டுகின்றன.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இலங்கை அரசு, பரிந்துரைகளில் பெரும்பா லானவற்றை அமல்படுத்தி விட்ட தாகவும் சில பரிந்துரைகளை அமல் செய்ய கூடுதல் காலம் தேவைப் படுவதாகவும் தெரிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x