Published : 11 Nov 2013 09:15 AM
Last Updated : 11 Nov 2013 09:15 AM

வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சினை: சவூதி அரேபியாவில் கலவரம் வெடித்தது

வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையால் சவூதி அரேபியாவின் ரியாத் பகுதியில் சனிக்கிழமை கலவரம் வெடித்தது.

இதில் சவூதியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 561 பேர் கைது செய்யப்பட்டனர்.

சவூதி அரேபிய தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் உள்நாட்டினருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நிதாகத் என்னும் சட்டத்தை அந்த நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

அவர்கள் நாடு திரும்ப 7 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்தக் கெடு கடந்த 4-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை குடியுரிமை அதிகாரிகளும் உள்ளூர் போலீஸாரும் வேட்டையாடினர்.

ரியாத் அருகேயுள்ள மன்புஹா பகுதியில் சனிக்கிழமை மாலை ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சுற்றி வளைத்தனர்.

அப்போது கலவரம் ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் சவூதியைச் சேர்ந்தவர். மற்றொருவர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. கலவரத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் புகலிடமாகக் கருதப்படும் மன்புஹா பகுதியில் கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

சவூதியின் மக்கள் தொகை 2.7 கோடி. இங்கு சுமார் 90 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. இவர்களில் 20 லட்சம் பேர் இந்தியர்கள்.் தமிழர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.

வேலையிழந்த ஒரு லட்சத்து 34 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பியிருப்பதாக வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இன்னமும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சவூதியில் தவித்து வருவதாகத் தெரிகிறது. சவூதி அரசின் கணக்கெடுப்பின்படி சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. -பிடிஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x