Last Updated : 06 Feb, 2015 12:47 PM

 

Published : 06 Feb 2015 12:47 PM
Last Updated : 06 Feb 2015 12:47 PM

இந்தியாவில் மத சகிப்புத்தன்மை இல்லை: ஒபாமா கருத்து

இந்தியாவில் தற்போது மத சகிப்புத்தன்மை இல்லாததை காந்தியடிகள் காண நேர்ந்தால், அவர் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.

தன் இந்தியப் பயணம் குறித்து வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா இது தொடர்பாக பேசும்போது, "மகாத்மா காந்தி மீது இந்தியா வைத்திருக்கும் அதே நன்மதிப்பை அமெரிக்காவும் கொண்டுள்ளது.

மிக அற்புதமான, பன்முகத்தன்மை கொண்ட அழகான நாடாக இந்தியா உள்ளது. அங்கு பார்த்த ஒவ்வொரு கலாச்சாரத்தையும் கண்டு நானும் மிஷேலும் வியப்படைந்தோம்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மதக் கோட்பாடுகளும், அவர்களது கலாச்சார நிகழ்ச்சிகளும் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறது. இந்தியாவில் பலதரப்பட்ட மத நம்பிக்கைகளால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சகிப்புதன்மையின்மையை இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தி கண்டிருந்தால் அதிர்ந்து போயிருப்பார்" என்றார் ஒபாமா.

இதனை அவர் எந்த ஒரு மதத்தினரையும் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது இந்திய பயணத்தின்போது, பாஜகவை மனதில் வைத்து மத தீவிரவாதத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை புதன்கிழமை தெரிவித்த நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா மீண்டும் இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக இந்தியா வந்திருந்த ஒபாமா, தனது பயணத்தின் இறுதி நாளான ஜனவரி 27-ம் தேதி டெல்லியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, நாட்டின் வளர்ச்சிக்கு மத சகிப்புத்தன்மை மிகவும் அவசியம் என்று வலியுறுத்தி இருந்தார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தப் பேச்சு துரதிர்ஷ்டவசமானவை என்று பாஜக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x