Published : 02 Jan 2014 04:46 PM
Last Updated : 02 Jan 2014 04:46 PM

நீதிமன்றம் செல்லும் வழியில் நெஞ்சு வலி: முஷாரப் மருத்துவமனையில் அனுமதி

தேசத் துரோக வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்றத்துக்கு இன்று சென்றுகொண்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த முஷாரப், அந்த வழக்குகளில் ஜாமீன் பெற்று அண்மையில்தான் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

தேசத் துரோக வழக்கில் அவர் சிறை வைக்கப்படலாம் என்று கூறப்படுவதால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் முஷாரப் தவிர்த்து வருவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி ஏற்கெனவே 2 முறை நீதிமன்றத்தில் முஷாரப் ஆஜராகவில்லை. ஜனவரி 2-ம் தேதி அவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும், இல்லையெனில் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில், நீதிமன்றத்துக்கு இன்று ஆஜராக சென்றுகொண்டிருந்தபோது, நெஞ்சுவலி என்று கூறி மருத்துவமனையில் முஷாரப் சேர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக முஷாரபின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் ரஸா புஹாரி நிருபர்களிடம் பேசியபோது, ராணுவ மருத்துவமனையில் முஷாரபுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் சுயநினைவுடன் உள்ளார் என்றார்.

முஷாரப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை போலீஸ் டி.ஐ.ஜி. முகமது சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவரது வழக்கறிஞர் அகமது ரஸா கசூரி நிருபர்களிடம் கூறியபோது, நீதிமன்றத்தில் ஆஜராக முஷாரப் தயாராக இருந்தார். ஆனால் அவரது உடல்நிலை திடீரென மோசமாகிவிட்டது என்றார்.

நீதிமன்றத்தில் ஆஜராக முஷாரப் பயப்படுகிறாரா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் ஒரு கமாண்டோ, எதற்கும் அஞ்சமாட்டார் என்றார் கசூரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x