Published : 12 Dec 2013 12:00 AM
Last Updated : 12 Dec 2013 12:00 AM

உலகின் சிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் அரவிந்த் கெஜ்ரிவால்

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘பாரின் பாலிஸி’ பத்திரிகையின் 2013-ம் ஆண்டின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், சமூக ஆர்வலர்கள் ஊர்வசி புட்டாலியா, கவிதா கிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

‘பாரின் பாலிஸி’ பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தங்களின் கருத்துகள் மற்றும் செயல்பாடுகளால் சமூகத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் 100 பேரை அடையாளம் காட்டும் வகையில் இப்பட்டியல் வெளியிடப்படுகிறது.

இந்தப் பட்டியலில் 32-வது நபராக அரவிந்த் கெஜ்ரிவால் (45) இடம்பெற்றுள்ளார்.

ஊழ லுக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுத்துச்சென்றவர்; குடிமக்களின் தேவை அறிந்து அரசு பணியாற்ற வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியவர்; குறிப்பாக டெல்லியில் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கெஜ்ரிவால் ஈடுபட்டவர்; முக்கிய அரசியல் தலைவர்களின் ஊழலை எந்தவிதமான அச்சமும் இல்லாமல் பகிரங்கப்படுத்தியவர்; காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நில பேர முறைகேடு குறித்து வெளிப்படையாக தெரிவித்தவர் என்று கெஜ்ரிவாலை அந்த பத்தி ரிகை புகழ்ந்துள்ளது.

ஊர்வசி புட்டாலியா, கவிதா கிருஷ்ணன் ஆகியோர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை கண்டித்து குரல் கொடுத்ததிலும், போராட்டம் நடத்தியதிலும் சிறப்பாக செயல்பட்டவர்கள் என்று அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மேலும் சில இந்தியர்கள் விவரம்:

மக்களின் உடல் நலத்துக்கான உரிமை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக ஐ.நா.வால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு பிரதிநிதி ஆனந்த் குரோவர், தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றின் நிர்வாகி ரோகித் வான்சூ, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டாக்டர் சஞ்சய் பாசு, ஏஞ்சல் லிஸ்ட் முதலீட்டு நிறுவன உரிமையாளர் நவல் ரவிகான்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எட்வர்ட் ஸ்னோடென்

பல்வேறு நாடுகளின் தலைவர் களையும், முக்கிய நபர்களையும் அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. கண்காணித்து வருகிறது. அவர்கள் பயன்படுத்தும் செல்போன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்களை ஒட்டுக் கேட்கும் பணியிலும், இணையம் மூலம் மேற்கொள்ளப்படும் தகவல் பரிமாற்றங்களை திருடி தகவல் சேகரிக்கும் பணியிலும் என்.எஸ்.ஏ. ஈடுபடுவதாக தகவல் வெளியானது. இந்த தகவல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட்ட என்.எஸ்.ஏ.வின் முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென், இந்த பட்டியிலில் முதலிடம் பெற்றுள்ளார்.

உலகத் தலைவர்கள்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரோவ், ஜப்பான் பிரதமர் ஷென்ஜோ அபே, ஈரான் அதிபர் ஹசன் ருஹானி, போப்பாண்டவர் பிரான்சிஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை, சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்படுவது தொடர்பாக ஆய்வுப் பணியில் ஈடுபட்ட உலக நாடுகள் குழுவை வழிநடத்திய ராஜேந்திர பச்சோரி, பாகிஸ்தானில் பெண் கல்வி உரிமைக்காக போராடிய மலாலா யூசஃப்சாய் ஆகியோரும் ‘பாரின் பாலிசி’ வெளி யிட்டுள்ள உலகின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.- பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x