Last Updated : 19 May, 2017 02:07 PM

 

Published : 19 May 2017 02:07 PM
Last Updated : 19 May 2017 02:07 PM

ட்ரம்புக்கும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையே நடந்த உரையாடலை வெளியிடத் தயார்: புதின் காட்டம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாரவ் இடையே நடந்த உரையாடலை வழங்கத் தயார் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.

அண்மையில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாரவ் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார். அப்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பான ரகசிய தகவல்களை வழங்கியதாக அமெரிக்க ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டன.

இந்தவிவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க ஊடகங்களை வெகுவாக சாடினார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷ்ய அதிபர் புதின் கூறும்போது, "அமெரிக்க அரசியலமைப்பு நிர்வாகத்தில் இது சாத்தியம் என்றால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாரவ் இடையே நடந்த உரையாடல் அடங்கிய ஆடியோ பேழையை அமெரிக்காவிடம் தருவதற்கு ரஷ்யா தயாராக இருக்கிறது. எந்தவித ரகசிய தகவலும் இருவருக்கும் இடையே பரிமாறப்படவில்லை"

மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு ரஷ்யா உதவுவதாகக் கூறப்படுவதற்கு பதிலளித்த புதின், இப்படி முட்டாள்தனமான தகவல்களை கூறுபவர்களைப் பற்றி என்னவென்று நினைப்பது. ரஷ்யாவுக்கு எதிரான முழுகங்களை முன்வைத்து அவர்கள் அவர்கள் அரசியல் செய்கின்றனர்.

அவர்கள் தங்கள் நாட்டையே துன்புறுத்திக் கொள்கிறார்கள். இதுபோன்ற செய்திகளைப் பரப்புபவர்கள் ஆபத்தானவர்கள், ஊழல்வாதிகள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x