Published : 11 Jan 2014 10:20 AM
Last Updated : 11 Jan 2014 10:20 AM

பொதுமக்கள் மீது குண்டு வீச்சு நடக்கவில்லை - அமெரிக்காவின் புகாருக்கு இலங்கை மறுப்பு

விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2009ல் நடந்த இறுதிக்கட்ட போரின்போது ஒன்றுமறியா பொதுமக்களை இலக்கு வைத்து இலங்கை ராணுவம் குண்டு வீசி படுகொலை புரிந்ததாக அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்துள்ளது.

இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வனிக சூரியா வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

புனித அந்தோனி மைதானத்தில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களை இலங்கை ராணுவம் குண்டு வீசி படுகொலை செய்ததாக அமெரிக்கா தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆதாரமில்லாதது.

போரில் காயம் அடைந்து உயிரிழந்த தமது படையினரின் உடல்களை ஒப்படைக் கும் இடமாக அந்த மைதானத்தை விடுதலைப்புலிகள் பயன்படுத்தினர் என்றே அந்த பகுதியில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

போரின்போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புனித அ ந்தோனி மைதானத்தில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மீது குண்டு வீச்சு நடக்கவில்லை என்ப தையும் திட்டவட்டமாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். உறுதி செய்யாமல் அமெரிக்கத் தூதரகம் ஆதாரமில்லாத இத்தகைய புகாரை வெளியிட்டுள்ளது திகைப்பில் ஆழ்த்துகிறது என்று வனிக சூரியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புனித அந்தோனி மைதானம்- இலங்கை ராணுவம் 2009 ஜனவரியில் குண்டு வீசியதில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உயிரிழந்த இடம்’ என்ற தலைப்பிட்டு புகைப்படம் ஒன்றை அமெரிக்கத் தூதரக அதிகாரி ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

ஒன்றுமறியா அப்பாவி தமிழர்கள் தப்பிப்பதற்காக சண்டை நடக்காத இடமாக விடுதலைப் புலிகளாலும் ராணுவத்தாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட இடங்களிலும் உயிரிழப்பு ஏற்பட்ட படங்களை ட்விட்டரில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டது. இறுதிக்கட்டப் போரின்போது அப்பாவி பொதுமக்கள் தங்கவைக்கப்பட்ட இடங்களில் ராணுவம் குண்டு வீச்சு நடத்தியதாக வெளியாகும் புகார்களை இலங்கை ராணுவம் நிராகரித்து வருகிறது.

மனித உரிமைகளை இலங்கை மீறுவதாக அமெரிக்கா ஆதரவில் 3வது தீர்மானம் ஐநா மனித உரிமைகள் பெருமன்றத்தில் மார்ச்சில் கொண்டு வரப்பட உள்ள நிலையில் அமெரிக்கத் தூதரகத்தின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

அமெரிக்கா தரப்பில் முன்பு கொண்டு வரப்பட்ட 2 தீர்மானங்கள் இந்தியாவின் ஆதரவில் நிறைவேறியது.

இலங்கைத் தமிழர்களுடன் நல்லிணக் கத்தை ஏற்படுத்த துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என இரு தீர்மானங்களும் வலியுறுத்துகின்றன.

30 ஆண்டு கால போரில் மிகவும் சின்னாபின்னமடைந்த யாழ்ப்பாணம் பகுதிக்கு 2 நாள் பயணமாக உலக கிரிமினல் நீதி அலுவலகத்தின் அமெரிக்க தூதர் ஸ்டீபன் ஜே ராப் தமது இலங்கை பயணத்தின் ஒரு பகுதியாக சென்றுள்ளார்.

அவரது யாழ்ப்பாண பயணம் அமெரிக்கத் தூதரகத்துக்கு எதிரே போராட்டம் வெடிக்க காரணமாக அமைந் தது. இலங்கையின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக இலங்கை தேசியவாத கட்சி ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் கொண்டுவரப்படும் தீர்மானம் இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் ராப் தெரிவித்த கருத்தால் போராட்டம் வெடித்தது.

கடந்த 2009–ம் ஆண்டு விடுதலைப்புலி களுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே இறுதிக்கட்ட சண்டை நடந்தது. அப்போது, அப்பாவி தமிழர்கள் 40 ஆயிரம்பேரை ராணுவம் குண்டு வீசி கொன்றதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x