Published : 03 Feb 2014 12:23 PM
Last Updated : 03 Feb 2014 12:23 PM

தண்ணீருக்கு அடியில் திருமணம்- 130 மீட்டர் ஆழத்தில் கின்னஸ் சாதனை

தாய்லாந்தின் டிராங்க் பகுதியில் உள்ள சாங் ஹாங் ஏரியில் தண் ணீருக்கு அடியில் 130 மீட்டர் ஆழத்தில் திருமணம் செய்து கொண்ட புதுமண ஜோடி கின் னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த ஹிரோயுகி யோஸ்கிடாவும் அமெரிக்காவைச் சேர்ந்த சான்ட்ரா ஸ்மித்தும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். நீச்சல் பயிற்சியாளர்களான அவர் கள், தங்கள் அன்பின் ஆழத்தை வெளிப்படுத்த தண்ணீரில் அதிக பட்ச ஆழத்தில் மூழ்கி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.

அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம் தாய்லாந்தின் டிராங்க் பகுதியில் உள்ள சாங் ஹாங் ஏரி. மணமகனும் மணமகளும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள் உதவியுடன் கடந்த 6 மாதங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். சில நாள்களுக்கு முன்பு சாங் ஹாங் ஏரிக்கு அடியில் 130 மீட்டர் ஆழத்தில் உள்ள சிறிய குகையில் அவர்களின் திருமணம் இனிதே நடைபெற்றது.

திருமணத்துக்கு மணமகள் பாரம்பரிய வெள்ளை கவுன் அணியவில்லை. மணமகன் கோட், சூட் அணியவில்லை. இருவரும் பிரத்யேக கருப்புநிற நீச்சல் உடையை அணிந்து தண்ணீரில் குதித்தனர். எட்டு நிமிடத்தில் திருமண மேடை அமைக்கப்பட்டிருந்த குகையை அடைந்தனர்.

தம்பதியர் வேண்டுமானால் ஆர்வக்கோளாறால் தண்ணீரில் மூழ்கலாம். ஆனால் திரு மணத்தை நடத்திவைக்க வேண் டிய மதபோதகர் தண்ணீரில் மூழ்குவாரா? முழங்கால் அடி தண்ணீரில் இறங்ககூட போதகர் மறுத்துவிட்டார். அதனால் நீச்சல் பயிற்சியாளர் பென் ரேமண்ட், போதகர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

வழக்கமான நடைமுறைகளின் படி மாப்பிள்ளை தோழன், பெண் தோழி என மிகக் குறைவான நண்பர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றி புதுமண தம்பதியர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் பங்கேற்ற அனைவருமே நீச்சல் பயிற்சியாளர்கள்.

உற்றார், உறவினர் இல்லாத குறையை ஏரி மீன்கள் போக்கின. சிறிய வகை மீன் கூட்டங்கள் புதுமண ஜோடிகளை சுற்றி சுற்றி வந்து வாழ்த்தின. ஒட்டுமொத்தமாக சுமார் 190 நிமிடங்கள் தண்ணீரில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தப் புதுமையான திருமணம் கின்னஸ் சாதனை புத்தகத் தில் இடம்பிடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x