Published : 07 Mar 2017 02:04 PM
Last Updated : 07 Mar 2017 02:04 PM

இந்திய மீனவரை சுட்டுக் கொல்லவில்லை: இலங்கை கடற்படை

இந்திய மீனவரை தாங்கள் சுட்டுக் கொல்லவில்லை என இலங்கை கடற்படை தளபதி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்றிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ப்ரிட்ஜோ (21) என்ற இளைஞர் பலியானார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசும், பல்வேறு அரசியல் தலைவர்களும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய மீனவரை தாங்கள் சுட்டுக் கொல்லவில்லை என இலங்கை கடற்படை தளபதி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

இலங்கைத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த எந்த உத்தரவும் இலங்கை கடற்படை அளிக்கவில்லை" என்று கூறியிருக்கிறார்.

மேலும் திங்கட்கிழமையன்று இந்திய மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றது என்ற குற்றச்சாட்டையும் திட்டவட்டமாக மறுத்தார்.

இதுகுறித்து லெப்டினன்ட் கமாண்டர் சமிந்தா வாலாகுலுஜி 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) கூறும்போது, "எல்லைத் தாண்டி மீன் பிடிக்கும் எந்த மீனவர்களை சுடுவதற்கு இலங்கை கடற்படைக்கு உத்தரவிடவில்லை. கடற்படை தளபதியிடமிருந்து உத்தரவு வழங்கபடாதவரை இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்த முடியாது. இலங்கை கடற்படைக்கு எல்லைத் தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் அதிகாரம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

சிறிய படகில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தது என்ற குற்றச்சாட்டுக்கு சமிந்தா பதிலளித்தபோது, "இந்திய கடலின் நீரோட்டத்தில் சிறிய படகுகளை பயன்படுத்த முடியாது. இலங்கை கடற்படை பெரிய படகுகளைதான் ரோந்து பணிக்கு பயன்படுத்துகிறது. தமிழக மீனவர் மீதான துப்பாக்கிச் சூட்டை இலங்கை கடற்படைதான் நிகழ்த்தியது என்று ஊடகங்கள் வெளியிடும் தகவலை நாங்கள் மறுக்கிறோம்

மார்ச் 11, 12-ல் நடைபெறவுள்ள கச்சத்தீவு தேவாலாய திருவிழாவை வெற்றிகரமாக கொண்டாட கடுமையாக உழைத்து வருகிறோம்" என்றார்.

முந்தைய சம்பவங்கள்:

இதேபோன்று கடந்த 2011-ம் ஆண்டு இரண்டு தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இலங்கை கடற்படை மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டையும் இலங்கை கடற்படை மறுத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x