Published : 14 Jul 2016 08:20 AM
Last Updated : 14 Jul 2016 08:20 AM

பிரியா விடை பெற்றார் டேவிட் கேமரூன்: பிரிட்டன் 2-வது பெண் பிரதமரானார் தெரசா மே

பிரிட்டனின் புதிய பிரதமராக தெரசா மே (59) நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்ட மார்க்கரெட் தாட்சருக்குப் பிறகு பிரதமராக பொறுப்பேற்றுள்ள 2-வது பெண் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதற்கு ஆதரவாக பொதுவாக்கெடுப்பு முடிவுகள் வெளியானது. தனது கருத்துக்கு மாறாக முடிவு அமைந்ததால், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனிடையே, கன்சர்வேட்டிவ் கட்சியின் தெரசா மே அடுத்த பிரதமராக பொறுப்பேற்பார் என்று 2 தினங்களுக்கு முன்பு கேமரூன் அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற பிரதமருக்கான கேள்விகள் நிகழ்ச்சியில் கடைசியாக கேமரூன் பங்கேற்றார். பின்னர் பிரதமர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, “பிரிட்டனின் பிரதமராக பதவி வகித்தது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கவுரவம்” என்றார். இதையடுத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கிருந்து வெளியேறினார்.

இதையடுத்து, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்ற கேமரூன், ராணி 2-ம் எலிசபெத்தைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதை எலிசபெத் ஏற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்ற தெரசா மே, ராணி எலிசபெத்தை சந்தித்தார். அப்போது பிரதமராக பொறுப்பேற்கும்படியும் புதிய அரசு அமைக்குமாறும் தெரசாவுக்கு ராணி அழைப்பு விடுத்தார்.

பின்னர் பிரதமர் இல்லத்துக்கு சென்ற அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, “புதிய அரசு அமைக்குமாறு ராணி கேட்டுக் கொண்டார். அதை நான் ஏற்றுக் கொண்டேன்” என்றார்.

தனிப்பட்ட முறையில் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதில் தெரசா மே-வுக்கு விருப்பமில்லை. எனினும், பொதுவாக்கெடுப்பு முடிவை அமல்படுத்தப்போவதாக அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது.

கடந்த 1997-ம் ஆண்டு முதல் மெய்டன்ஹெட் தொகுதி எம்.பி.யாக தெரசா மே பதவி வகித்து வருகிறார். கேமரூன் தலைமையிலான அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு இவர் பேங்க் ஆப் இங்கிலாந்தில் பணியாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x