Published : 07 Sep 2016 07:06 PM
Last Updated : 07 Sep 2016 07:06 PM
‘6 அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்ட மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்’ என, பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த 6 பேர் உட்பட, 166 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளில் 9 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நிலையில், உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப், பின்னர் தூக்கிலிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் ஜகியுர் ரெஹ்மான் லக்வி ஓராண்டுக்கு முன், ஜாமினில் விடுவிக்கப்பட்டு, பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவிவருகிறான். மேலும், 6 பேர் ராவல்பிண்டி சிறையில் உள்ளனர்.
சர்வதேச நிர்பந்தத்துக்குப் பின் மும்பை தாக்குதல் தொடர்பான விசாரணையை பாகிஸ்தான் தொடங்கினாலும், கடந்த 6 ஆண்டுகளாக இவ்வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்தியாவில் உள்ள 24 சாட்சிகளை தங்களின் விசாரணை நீதிமன்றத்துக்கு அனுப்பவேண்டும் எனக் கூறி, இவ்வழக்கை பாகிஸ்தான் இழுத்தடித்து வருகிறது.
இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு துணை செய்தித்தொடர்பாளர் மார்க் டோனர் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளிக்கும்போது,
‘2008 மும்பை தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். நீதி நிலைநாட்டப்படுவதைப் பார்க்க அமெரிக்கா விரும்புகிறது. தீவிரவாதிகள் தாக்குதலில் அமெரிக்க குடிமக்களும் இறந்துள்ளனர். எனவே நாங்கள் இவ்விஷயத்தில் மிகவும் கவலை கொண்டுள்ளோம்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு தீவிரவாத தடுப்பு நடவடடிக்கை தொடர்பான அனைத்து உளவு தகவல் பரிமாற்றமும், இதர ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறோம். அவர்கள் மண்ணில் இயங்கிவரும் அனைத்து தீவிரவாத குழுக்களையும் கண்காணித்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT