Published : 18 Dec 2013 12:00 AM
Last Updated : 18 Dec 2013 12:00 AM

தொலைபேசி ஒட்டுக்கேட்பு சட்டவிரோதமானது: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

தனிநபர்கள், உலகத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்ட அமெரிக்க தேசிய புலனாய்வு முகமையின் (என்எஸ்ஏ) செயல் அமெரிக்க அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லாரி கிளேமேன், சார்லஸ் ஸ்ட்ரேஞ்ச் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் அமெரிக்க மாவட்ட நீதிபதி ரிச்சர்ட் லியோன் இத்தீர்ப்பை திங்கள்கிழமை வழங்கினார். அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் நான்காவது திருத்தத தின்படி அநாவசியமான தேடுதல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தொலைபேசி உரையாடல்களை அநாவசியமாக ஒட்டுக் கேட்டதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தை என்எஸ்ஏ மீறியிருக்கிறது. இது சட்டவிரோதம் என நீதிபதி தன் 62 பக்க தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “பயங்கரவாதச் செயல்களைக் கண்காணிக்கவும், தடுக்கவுமே ஒட்டுக் கேட்புகள் மேற்கொள்ளப்படுகின்றன என அரசுத் தரப்பு தெரிவிக்கிறது. ஒட்டுக் கேட்கப்பட்ட விவரங்களை வைத்துப் பார்க்கையில் இக்காரணம் தீவிரமான சந்தேகத்தையே எழுப்புகிறது. இவ்வாறு ஒட்டுக் கேட்கப்பட்டதன் மூலம் பயங்கரவாதச் செயல் தடுக்கப்பட்டது என்பதற்கான ஒரு சம்பவத்தைக் கூட அரசுத் தரப்பு குறிப்பிடவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இத்தீர்ப்பினை அளித்துள்ள அதே சமயம், அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்வதற்கு அவகாசம் அளிக்கும் வகையிலும் தேசப் பாதுகாப்பு நலன் காரணமாகவும் தீர்ப்பை நிலுவையில் வைப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x