Published : 01 Mar 2014 09:30 AM
Last Updated : 01 Mar 2014 09:30 AM

இந்தியாவில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது- அமெரிக்க அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் தகவல்

இந்தியாவில் நீதித்துறை உள்பட அரசின் எல்லா நிலைகளிலுமே ஊழல் புரையோடி விட்டதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

2013ம் ஆண்டின் மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந் திர அறிக்கை இந்த தகவலை தெரிவிக் கிறது. இந்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வியாழக்கிழமை வெளியிட்டார்.

அதிகார நிலைகளில் நடக்கும் ஊழலை கட்டுப்படுத்த குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வழி இருந்தாலும் அந்த சட்டத்தை அமல்படுத்த இந்திய அரசு முன் வருவதில்லை. தாங்கள் செய்யும் ஊழல்களுக்கு அதிகாரிகள் தண்டிக்கப்படாமல் தப்பிக்கின்றனர்.

ஜனவரிக்கும் நவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் 583 ஊழல் வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. 2012ல் மத்திய கண்காணிப்பு ஆணையம் 7224 புகார்களை பெற்றது. இதில் 5720 வழக்குகளில் நடவடிக்கை எடுக்க அது பரிந்துரைத்தது. அரசுத் துறைகளிலிருந்து சேவைகள் பெறுவ தற்காகவே லஞ்சம் கொடுக்கவேண்டிய நிலை மக்களுக்கு உள்ளதாக தன் னார்வ தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. லஞ்சம் பற்றிய தகவல்களை திரட்டுவதற்காக இலவச தொலைபேசி இணைப்பு வசதியை மத்திய கண்காணிப்பு ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.

சமூக நல அமைப்புகள் ஊழல் பற்றி மக்களின் கவனத்தை ஈர்க்க ஆர்ப் பாட்டங்கள் நடத்தியுள்ளன. தனிப்பட்ட நபர்களின் ஊழல் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. வங்கிகள், காப்பீட்டுத்துறை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார்துறைகளில் ஊழல் பற்றிய புகார்களை விசாரித்து பொதுமக்களின் குறைதீர்க்க தலைமை கண்காணிப்பு அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது. அரசாங்கத்தில் நடக்கும் ஊழல்களை பற்றி விசாரிக்க லோக்பால் விசாரணை அமைப்பை உருவாக்க கடந்த டிசம் பரில் நாடாளுமன்றம் மசோதா நிறை வேற்றியது.

வறுமை ஒழிப்புக்காக அரசு கொண்டு வரும் திட்டங்களை அமல்செய்வதில் உள்ள குறைபாடுகளும் ஊழல்களும் இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேற உதவுவதில்லை.

ஊழலை எதிர்த்து புகார் கொடுப்பது, வழக்கு தொடுப்பது உள்ளிட்ட சமூக சேவை பணிகளில் ஈடுபட்ட ராஜ் மோகன் சந்திரா என்பவரின் கொலை தொடர்பாக திருவண்ணாமலை நகராட்சி உறுப்பினர் வெங்கடேசன் என்பவர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல் தொடர்பான அறிக்கை மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தாக் கல் செய்யப்பட்ட போதிலும் அதை மகாராஷ்டிர அரசு நிராகரித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி சம்பந்தப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் விசாரணை முடியவில்லை.

ஜம்மு காஷ்மீர், வட கிழக்கில் பயங் கரவாதிகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். ஜம்மு காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் நக்ஸல், தீவிரவாதிகள் பிரச்சினை காரணமாக 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த இடங்களை விட்டுச்செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அஸ்ஸாம், மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இனவாத குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு ஏராளமானோர் வீடிழந்து வேறு இடங் களுக்கு புகலிடம்தேடிச் சென்றுள்ளனர்

இந்தியாவில் போலீஸும் பாது காப்புப் படையினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். 2002ல் நடந்த குஜராத் கலவர வழக்கு தொடர்பாக சில அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்துள்ளது நல்ல முன் னேற்றம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x