Published : 10 Mar 2014 10:38 AM
Last Updated : 10 Mar 2014 10:38 AM

மும்பை தாக்குதல் வழக்கு: வழக்கறிஞருக்கு அச்சுறுத்தல்

மும்பை தாக்குதல் வழக்கு, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை வழக்கு ஆகியவற்றில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகி வரும் முகமது அஸார் சௌத்ரி, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அரசை கோரியுள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பேநசீர் கொலை வழக்கு விசாரணையில் வெள்ளிக்கிழமை அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணை வரும் 22-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் தனக்கு பாதுகாப்பு கோரி முகமது அஸார் சௌத்ரி மனு தாக்கல் செய்துள்ளதை அந்நீதிமன்ற ஊழியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அஸாருக்கு வழங்கிய பாது காப்பை பஞ்சாப் மாகாண அரசு விலக்கிக் கொண்டது. இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு அஸார் எழுதிய கடிதத்தில், “மிகவும் முக்கியமானதொரு வழக்கில் ஆஜராகிவரும் எனக்கு போதிய பாதுகாப்பு அளிக்க அரசு மறுத்துவிட்டது. கூடுதல் பாதுகாப்பு வழங்காத பட்சத்தில், இந்த வழக்கில் ஆஜராக விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் அஸாருக்கு முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் சௌத்ரி ஜூல்பிகர் அலி, கடந்த மே மாதம் இஸ்லாமாபாதில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பேநசீர் புட்டோ கொலை வழக்கு மட்டுமின்றி மும்பை தீவிரவாத வழக்கு விசாரணையிலும் அரசு தரப்பு வழக்கறிஞராக அஸார் ஆஜராகி வருகிறார். இந்த வழக்கில் லஷ்கர் – இ தொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டர் ஸகியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x