Last Updated : 18 Oct, 2014 10:33 AM

 

Published : 18 Oct 2014 10:33 AM
Last Updated : 18 Oct 2014 10:33 AM

ஹாங்காங்கில் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அகற்றம்: பேச்சுவார்த்தை அறிவிப்பை அடுத்து போலீஸ் நடவடிக்கை

போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று ஹாங்காங் அரசு கூறியதையடுத்து, போராட்டக் களத்தில் இருந்த தடுப்புகள், போராட்டச் சின்னமான குடைகள், போராட்டக்காரர்களின் கூடாரங்கள் ஆகியவற்றை போலீஸார் அகற்றியுள்ளனர்.

ஜனநாயக சீர்திருத்தம் கோரி கடந்த சில வாரங்களாக ஹாங் காங்கில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹாங்காங்கின் முதன்மை நிர்வாகியான லியுங் சுன் யிங் சில நாட்களுக்கு முன்பு போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று காலை போராட்டக்காரர்கள் ஆக் கிரமித்திருந்த `மாங்காக்' எனும் இடத்தில் போராட்டக்காரர்கள் வைத்திருந்த தடுப்புகள், குடைச் சின்னங்கள், போராட்டக்காரர் களின் கூடாரங்கள் ஆகியவற்றை போலீஸார் அகற்றினர்.

அப்போது போராட்டக்காரர்கள் யாரும் இதனை எதிர்க்கவில்லை. ஆனால், போலீஸாரின் இந்த நடவடிக்கை போராட்டக்காரர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, மீண்டும் போராட்டக் குழுக்கள் எல்லாம் ஒன்று கூடி கலந்தாலோசித்த‌ பிறகுதான், முதன்மை நிர்வாகியுடன் பேச்சு வார்த்தை நடத்தலாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரிட்டன் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங், 1997-ம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஹாங்காங் நகரம் தலைமை நிர்வாக அதிகாரியின் ஆட்சியதி காரத்தின் கீழ் நிர்வகிக்கப்படு கிறது. ஹாங்காங்கில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பல ஆண்டுகளாகவே மக்கள் போராட்டம் நடத்தி வந்தாலும் கடந்த சில மாதங்களாக இப்போராட்டம் வலுப்பெற்றுள்ளது. தேர்தலுக்கு சீன அரசு ஒப்புக் கொண்டாலும், தேர்தலில் போட்டியிடுபவர்களை சீன அரசு தான் தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சீன அரசுக்கு எதிராக கடும் போராட்டம் வெடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x