Published : 04 Jun 2017 10:57 AM
Last Updated : 04 Jun 2017 10:57 AM

உலக மசாலா: மைதானம் நடுவில் 100 வயது மரம்

பெய்ஜிங்கில் உள்ள யுகாய் உயர்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம் மிகவும் கவனமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மைதானத்துக்கு நடுவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது. மைதானத்தில் உள்ள மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். “பள்ளியைச் சுற்றிலும் சரித்திரப் புகழ்பெற்ற கட்டிடங்கள் இருப்பதால், மைதானத்துக்கு இடமே கிடைக்கவில்லை. இறுதியில் இந்த இடம்தான் கிடைத்தது. மரத்தை அகற்ற முயன்றபோது, அரசாங்க அதிகாரிகள் இது 100 வயதைக் கடந்த மரம் என்பதால் வெட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். வேறு இடத்தில் பெயர்த்து வைக்கும்போது உயிர் பிழைக்கும் சாத்தியமும் குறைவு என்று தெரிந்தது. அதனால் மரத்துக்கு வேலி அமைத்துவிட்டு, சுற்றியுள்ள இடங்களைப் பயன்படுத்தி வருகிறோம். விளையாடுவதற்குத் தடையாக இருப்பதால், மரத்தை அகற்ற வேண்டும் என்கிறார்கள். நாங்கள் சம்மதிக்கவில்லை. மைதானத்துக்கு இன்னொரு இடம் கிடைத்துவிட்டது. இந்த மைதானத்தில் பயிற்சிகளையும் போட்டிகளைப் புது மைதானத்திலும் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் பள்ளி நிர்வாகி.

நூறு வயது மரத்தைக் காப்பாற்றும் நல்ல உள்ளங்கள்!



ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் வசிக்கிறார் 57 வயது கார்மென் ஜிமெனெஸ். 28 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கண்ணில் மோசமான காயம் ஏற்பட்டது. எவ்வளவோ மருத்துவம் பார்த்தனர். ஆனாலும் அவரது பார்வை பறிபோய் விட்டது. குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள். இத்தனை ஆண்டுகளும் பார்வையற்றவராகவே வீட்டிலும் வெளியிலும் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் இவருக்குப் பார்வை தெரிகிறது என்ற விஷயத்தைக் குடும்பத்தினர் கண்டுபிடித்துவிட்டனர். “பார்வையற்றவர் போலில்லாமல் ஒப்பனையிலிருந்து பல விஷயங்களையும் மிகச் சரியாகச் செய்வார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பார். எங்களுக்குச் சந்தேகம் வந்தாலும் ஏற்கெனவே பார்வை இல்லாமல் கஷ்டப்படுபவரின் மனம் வருத்தப்படுமே என்று கேட்கவில்லை.

அவருக்குத் தெரியாமல் கண்காணித்தோம். யாரும் இல்லாத நேரத்தில் வெகு இயல்பாகப் பார்வையுள்ளவர்களைப் போல நடந்துகொண்டார். அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு வருடங்களும் பார்வையற்றவர் என்ற காரணத்துக்காக மிகவும் அக்கறையாகப் பார்த்துக்கொண்டோம். எந்தத் தொந்தரவும் கொடுத்தது இல்லை. எங்களிடம் கூட உண்மையைச் சொல்லாமல் இருந்தது ஏன் என்று புரியவில்லை” என்றார் கணவர். கார்மெனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். “எனக்குச் சமூகத்துடன் சேர்ந்து வாழப் பிடிக்கவில்லை. எதிரில் வருபவர்களுக்கு வணக்கம் சொல்வது, வீட்டுக்கு வருகிறவர்களை உபசரிப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் பிடிக்காது. இவற்றை எப்படித் தவிர்ப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் கண்ணில் காயம் ஏற்பட்டது. அதைப் பயன்படுத்திக் கொண்டேன்” என்கிறார் கார்மென். தன்னை நம்பிய குடும்பத்தினரை ஏமாற்றியதோடு, அரசாங்கத்தையும் ஏமாற்றியிருக்கிறார் இவர். பார்வையற்றவருக்கான பொருளாதார உதவிகளைப் பெற்று வந்ததால் சிக்கலில் இருக்கிறார்.

இப்படியும் ஒரு பெண்ணா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x