Published : 18 Aug 2016 05:58 PM
Last Updated : 18 Aug 2016 05:58 PM
பலுசிஸ்தான் பற்றி பேசி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ‘சிகப்புக்கோட்டை’ தாண்டி விட்டார் என்று பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அடுத்த மாதம் ஐநா பொதுச்சபையில் காஷ்மீர் விவகாரத்தை ‘பலவந்தமாக’ எழுப்புவோம் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஸகாரியா கூறும்போது, “கடந்த ஆண்டு பிரதமர் (பாகிஸ்தான்) ஐநா-வில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார், அடுத்த மாதக் கூட்டத்திலும் நாங்கள் வலுக்கட்டாயமாக காஷ்மீர் பிரச்சினையை எழுப்புவோம்” என்றார்.
இஸ்லாமாபாத்தில் வாராந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறும்போது, “பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அராஜக ஆட்சி செய்வதாக தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார், இது ஐநா விதிமுறைகளுக்கு புறம்பானது இதன் மூலம் சிகப்பு கோட்டை கடந்து விட்டார் பிரதமர் மோடி.
காஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை மறைக்க பலுசிஸ்தான் விவகாரத்தை மோடி பேசியுள்ளார். பலுசிஸ்தான் மற்றும் கராச்சியில் இந்தியாதான் மோசமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை உறுதி செய்ய ஐநாவும் உலக நாடுகளும் இந்தியாவை வலியுறுத்த வேண்டும்.
காஷ்மீரில் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகள் மூலம் மனித உரிமைகள் மீறப்படுவதை பாகிஸ்தான் கடுமையாகக் கண்டிக்கிறது. வன்முறைக்கு அங்கு 80 பேர் பலியாகியுள்ளனர். பெல்லட் துப்பாக்கிகள் பிரயோகத்தில் சுமார் 100 பேர் பார்வையிழந்துள்ளனர்.
ஆம்னெஸ்ட் இண்டெர்நேஷனல் மீது இந்தியா நடவடிக்கை எடுப்பதிலிருந்தே மனித உரிமைகளுக்கு இந்தியா எவ்வளவு மதிப்பளிக்கிறது என்பது தெரியவருகிறது.
மேலும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் பாகிஸ்தான், சீனாவின் வளர்ச்சிக்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த தெற்காசியப்பகுதிக்கானது, இத்தகைய பயன் தரும் பொருளாதார திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு காட்டுவதை புரிந்து கொள்ள முடியவில்லை.
அடுத்தவாரம் நடைபெறும் சார்க் நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்திற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. இதில் கலந்து கொள்ள அருண் ஜேட்லியிடமிருந்து பதில்வருமென காத்திருக்கிறோம்” என்றார் சகாரியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT