Published : 03 Sep 2018 02:47 PM
Last Updated : 03 Sep 2018 02:47 PM

ஈரான் பாதுகாப்புத் திறனை அதிகரிக்க வேண்டும்: அலி காமெனி

ஈரான் அதன் பாதுகாப்புத் திறனை அதிகரிக்க வேண்டும் என அந்நாட்டுத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்திருக்கிறார்.

எதிர்கால அணு ஆயுத சோதனைகள் குறித்து பிரான்ஸ் அழைத்த பேச்சுவார்த்தையை நிராகரித்த பிறகு, கடந்த சனிக்கிழமையன்று போர் விமானங்கள், போர் கப்பல்கள், அணு ஆயுத சோதனைகளில் திறனை இன்னும் கூடுதல்படுத்த வேண்டும் என்று ஈரான் அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், ஈரான் தலைவர் அயோத்தெல்லா அலி காமெனி ஞாயிற்றுக்கிழமை கூறும்போது, "எங்களுக்கு போரில் விருப்பம் இல்லை. ஆனால் ஈரானின் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புத் திறனை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அமெரிக்கா, ஈரான் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும்  இடையே மோதல் முற்றி வருவது சர்வதேச நாடுகளுக்கிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆயுதங்களை பலப்படுத்த வேண்டும் என்று ஈரான் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x