Published : 08 Sep 2018 04:36 PM
Last Updated : 08 Sep 2018 04:36 PM
ஐக்கிய நாடுகள் சபையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து ஏமனின் அரசுக் குழு வெளியேறியுள்ளது.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகள் இந்தப் பேச்சு வார்த்தைக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் ஏமன் அரசுக் குழு குற்றச்சாட்டியுள்ளது.
தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் ஆதரவுடன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஏமன் அரசுக்கும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தப் பேச்சு வார்த்தையில் ஏமன் வெளியுறவுத் துறை அமைச்சர் காலித் அல் யமானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏமனுக்கான ஐக்கியா நாடுகளின் தூதர் மார்டின் கூறும்போது, "எங்களால் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகளை சனாவிலிருந்து இங்கு அழைத்து வர முடியவில்லை” என்றார்.
இதனைத் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தை மேலும் மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறிய நிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இந்தப் பேச்சுவார்த்தையை நாசம் செய்ய முயற்சிக்கிறது என்று கூறி ஏமன் அரசுக் குழு இந்த அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT