Published : 12 Jun 2019 04:38 PM
Last Updated : 12 Jun 2019 04:38 PM

நீரவ் மோடியின் ஜாமீன் மனு 4வது முறையும் நிராகரிப்பு: பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு

லண்டனில் கைதான இந்திய வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை 4-வது முறையாக பிரிட்டன் நீதிமன்றம்  நிராகரித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 14 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து லண்டனுக்கு தப்பியோடிய நீரவ் மோடி கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். கைதானவுடன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. ஆனால் மார்ச் 29 வரை ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதைத்தொடர்ந்து மேலும் 2 முறை அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்தநிலையில் ஜாமீன் கோரி அவர் 4-வது முறையாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

நீரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்ட நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பியோட வாய்ப்பில்லை என்றார். தேவைப்பட்டால் அவர் வீட்டை தொடர்ந்து வீடியோ கண்காணிப்பில் வைக்கவும் தயாராக இருப்பதாக வழக்கறிஞர் கூறினார்.

ஆனால் இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அப்போது நீதிபதி கூறுகையில் ‘‘வெளிநாடுகளில் இருந்து தப்பி வருபவர்கள் பிரிட்டனை புகலிடமாக கருதுவது ஏன். இவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றுகளுக்கும், விசாரிக்கப்பட்ட சாட்சிகளுக்கும் இடையே முண்பாடு இருப்பது தெரிகிறது. ஜாமீனில் விடுவிப்பதற்கு உரிய வலிமையான ஆதாரம் இல்லை’’ எனக் கூறினார்.

இதையடுத்து நீரவ் மோடியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கும் மனு மீதான விசாரணை 28 நாட்களுக்கு பிறகு நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x