Published : 03 Jun 2019 03:04 PM
Last Updated : 03 Jun 2019 03:04 PM
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தாக்குதலைத் தடுக்க இலங்கை அதிபர் சிறிசேனா தவறிவிட்டார் என்று தற்காலிகமாக நீக்கப்பட்ட தலைமை காவல் அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த 21-ம் தேதி அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 253 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உலக நாடுகளை அதிர்ச்சிடையச் செய்த இச்சம்பவத்தில் தொடர்புடைய 76 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலருக்கு உள்ளூர் தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்குத் தொடர்பு இருந்தது. அதே நேரம் இந்த அமைப்பு தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.ஆனால், இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மேலும் இந்தத் தாக்குதல் புலனாய்வுத் துறையின் தோல்வி என்றும் பாதுகாப்புத் துறையின் முக்கிய அதிகாரிகளை ராஜினாமா செய்யும்படியும் இலங்கை அதிபர் சிறிசேனா கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஐஜிபி புஜித் ஜெயசுந்தரா மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் ஃபெர்னாண்டோ ஆகியோர் தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்து நீக்கப்பட்ட தலைமை காவல் அதிகாரி புஜித் ஜெயசுந்தரா புகார் அறிக்கை ஒன்றை நீதிமன்றதிடம் அளித்தார்.
அதில், ” புலனாய்வு நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் குறை இருந்தது. கடந்த அக்டோபர் மாதம் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் விக்ரமசிங்கேவுக்கும் இடையே நிலவிய பிரச்சினை காரணமாக சிறிசேனா தேசிய பாதுகாப்பு கவுன்சிலிங் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார்.
தேசிய புலனாய்வுத் துறை இந்தியப் புலனாய்வுத் துறையிடமிருந்து வந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. தேசிய புலனாய்வுத் துறை எந்தத் தகவலையும் போலீஸாரிடம் பகிர்ந்து கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT