Last Updated : 05 Jun, 2019 05:36 PM

 

Published : 05 Jun 2019 05:36 PM
Last Updated : 05 Jun 2019 05:36 PM

எகிப்தில் தொழுகையின்போது குண்டுவீச்சு; 10 போலீஸார் பலி

சோதனைச் சாவடி பணியிலிருந்த 10 போலீஸார் ஈத் பண்டிகையை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்டபோது அவர்களை தீவிரவாதிகள் குண்டுவீசிக் கொன்ற சம்பவம் எகிப்தில் நேற்று நடந்தது.

எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி அல் அரிஷ் நகரத்தையொட்டிய கடற்கரைப் பிரதேசம். அங்கு சோதனைச் சாவடிப் பணியிலிருந்த காவலர்கள் நேற்று காலை ஈத் பண்டிகையை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஆயுத வாகனங்களுடன் வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 10 காவலர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தாக்குதல் சம்பவம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்த விவரம்:

''இத்தாக்குதல் சம்பவத்தில் 8 காவலர்களும் இரு அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு விரைந்து தப்பித்துச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுதம் தாங்கிய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. எனினும் அவர்கள் பாலைவனம் வழியே தப்பிச்சென்றபோது போர் விமானம் ஒன்று அவர்களைத் துரத்தியது. இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதல் சம்பவத்திற்கு இன்னும் எந்த தீவிரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. மேலும் இச்சம்பவத்திற்குக் காரணமாவர்கள் யார் என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை''.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எகிப்தில் சமீப ஆண்டுகளாக வடக்கு சினாய் தீபகற்பகத்தை மையமாகக் கொண்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x