Last Updated : 18 Jun, 2019 10:54 AM

 

Published : 18 Jun 2019 10:54 AM
Last Updated : 18 Jun 2019 10:54 AM

2027-ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா முறியடிக்கும்: 2050-க்குள் 27 கோடி அதிகரிக்கும்: ஐ.நா. தகவல்

உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள நாடாக இருக்கும் சீனாவை முறியடித்து,  2027-ம் ஆண்டில் இந்தியா அந்த இடத்தை பிடிக்கும் என்று ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

2019-ம் ஆண்டில் இருந்து 2050-ம் ஆண்டு வரையில் இந்தியாவின் மக்கள் தொகை 27.3 கோடி அதிகரிக்கும். இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சீனாவின் மக்கள் தொகை 2019 முதல் 2050ம் ஆண்டுக்கு இடையே 3.14 கோடி அதாவது 2.2 சதவீதம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. உலக மக்கள் தொகை குறித்த அறிக்கையை நேற்று வெளியிட்டது. "உலக மக்கள் தொகை கண்ணோட்டம்" என்ற தலைப்பில் இந்த அறிக்கையை ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை நேற்று வெளியிட்டது: அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகின் மக்கள்தொகை அடுத்த 30 ஆண்டுகளில் 200 கோடி அதிகரிக்கும், அதாவது தற்போது 770 கோடி மக்கள் தொகை இருக்கும் நிலையில், 2050ம் ஆண்டில் 970 கோடியாக அதிகரிக்கும். இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகின் மக்கள் தொகைப் பெருக்கம் உச்ச கட்டத்தை அடைந்து, 1100 கோடியாக அதிகரிக்கும்.

2050ம் ஆண்டுவரை உலகின் மக்கள் தொகை உயர்வதற்கு 9 நாடுகள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக இந்தியா முதலாவதாகவும், அதைத் தொடர்ந்து நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, இந்தோனேசியா, எகிப்து, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

இந்தியாவில் இப்போதுள்ள மக்கள் தொகைப் பெருக்க நிலவரப்படி கணித்தால், 2027-ம் ஆண்டு சீனாவின் மக்கள் தொகைப் பெருக்கத்தை முறியடித்துவிடும். அதாவது 2019-ம் ஆண்டு முதல் 2050ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை 27.3 கோடி அதிகரிக்கும். இந்தியா மற்றும் சீனாவின் மக்கள் தொகை மட்டும் 2050ம் ஆண்டில் கணக்கில் எடுக்கும்போது உலக மக்கள் தொகையில் 23 சதவீதத்தைக் கொண்டிருக்கும்.

முன்னதாக 2022-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை முறியடிக்கும் என்று ஐ.நா. 2 ஆண்டுகளுக்கு முன் கணித்திருந்தது. ஆனால், இப்போது தனது கணிப்பை திருத்தியுள்ளது.

மேலும், உலக அளவில் இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகிய நாடுகளில் பெண்களின் சராசரியாக 2  குழந்தை பெற்றுக்கொள்பவர்களாக இருப்பார்கள்.

மேலும், அதிநவீன மருத்துவ சிகிச்சை, மருத்துவம், புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு போன்றவற்றால், மக்களின் வாழ்நாள் அதிகரித்து, முதியோரின் வாழ்நாள் அதிகரித்து, எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், பல்வேறு நாடுகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவு குறையும், மக்கள் தொகையை குறைக்கவும் சில நாடுகள் முயற்சி எடுக்கும்.

2050ம் ஆண்டில் உலகில் உள்ள 6 மக்களில் ஒருவர் அதாவது 16 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள். தற்போது 11  பேரில் ஒருவராக அதாவது 9 சதவீதம் இருப்பது 16 சதவீதமாக அதிகரிக்கும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தற்போது உலகில் 14.303 கோடி இருக்கும் நிலையில் இது மூன்று மடங்கு அதிகரித்து 42.60 கோடியாக 2050ம் ஆண்டு அதிகரிக்கும்.

உலக அளவில் குழந்தை பெறும்வீதம் பெண்களுக்கு கடந்த 1990களில் 3.2 ஆக இருந்தது, 2019ம் ஆண்டில் 2.5 சதவீதமாக இருந்தது. இது மேலும் 2050ம் ஆண்டில் 2.2 சதவீதமாகக் குறையும். அதாவது பெண் ஒருவர் சராசரியாக 2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்வார்.

உலகில் வாழும் மக்களின் சராசரி வாழ்நாள் 72.6 ஆக இருக்கும் நிலையில், இது 2050ம் ஆண்டில் 77.1 ஆக அதிகரிக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x