Published : 11 Mar 2018 11:20 AM
Last Updated : 11 Mar 2018 11:20 AM
வடகொரியா விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளார். வரும் மே மாதம் அதிபர் ட்ரம்பும் அதிபர் கிம் ஜோங் உன்னும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் அதிபர் ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது வடகொரியா விவகாரத்தின் தற்போதைய நிலவரம் குறித்து ஜி ஜின்பிங்கிடம் ட்ரம்ப் எடுத்துரைத்தார். கொரிய தீபகற்ப பிரச்சினைக்கு தீர்வு காண ட்ரம்ப் அதிக அக்கறை காட்டுவதற்கு ஜின்பிங் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவையும் ட்ரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வடகொரிய நிலவரத்தை விளக்கினார். இருதலைவர்களும் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். இந்த விவகாரம் குறித்து நேரில் பேசுவதற்காக பிரதமர் ஷின்சோ அபே ஏப்ரல் மாதம் அமெரிக்கா செல்கிறார்.
இதனிடையே வடகொரியா, தென்கொரியா உச்சி மாநாட்டை ஏப்ரல் இறுதியில் நடத்த தென்கொரிய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த மாநாடு இருநாட்டு எல்லையில் உள்ள பான்முன்ஜியோம் அமைதி கிராமத்தில் நடைபெறும் என்று தெரிகிறது. அப்போது வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் சந்தித்துப் பேச உள்ளார். மாநாட்டுக்கு முன்பே தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் வடகொரியாவுக்கு அரசு முறை பயணம் செல்லக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT