Published : 24 Apr 2019 12:15 PM
Last Updated : 24 Apr 2019 12:15 PM
இலங்கையில் பல்வேறு இடங்களில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தேவாலயக் கட்டிடத்தின் சில பகுதிகள் வெடித்துச் சிதறின.
இந்த குண்டுவெடிப்பு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களைக் குறிவைத்து நடந்தன.
இதனைத் தொடர்ந்து நீர்கொழும்பு பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது. பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கரத் தாக்குதல் நடந்தது. மொத்தம் 8 இடங்களில் தாக்குதல்கள் நடந்தன.
இந்தக் குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 359 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த தற்கொலைப் படை தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
அதில் செபாஸ்டின் தேவலாயத்துக்குள் பெரிய பை ஒன்றை மாட்டிக் கொண்டு தீவிரவாதி ஒருவர் பெண் குழந்தை ஒன்றின் கன்னத்தை தட்டிக் கொண்டே நுழைகிறார்.
மற்றொரு சிசிடிவி காட்சியில் ஓட்டல் ஒன்றில் இரண்டு தீவிரவாதிகள் லிப்ஃட்டில் செல்கின்றனர். இந்த இரண்டு சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இலங்கை தீவிவாதிகளால் வைக்கப்பட்ட குண்டுகளை செயலிழக்கச் செய்யும் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டு வருவதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT