Last Updated : 09 Mar, 2019 10:03 AM

 

Published : 09 Mar 2019 10:03 AM
Last Updated : 09 Mar 2019 10:03 AM

குண்டு வீசி மரங்களை அழித்ததாக இந்திய விமானப்படை மீது எப்ஐஆர்: பாக். அரசு நடவடிக்கை

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் 19 மரங்களை குண்டு வீசி அழித்ததாக இந்திய விமானப்படையின் அடையாளம் தெரியாத விமானிகள் மீது முதல் தகவல் அறிக்கையைப் பாகிஸ்தான் வனத்துறை பதிவு செய்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துவிட்டதாக மத்திய அரசு கூறி வரும் நிலையில், அதை மறுக்கும் வகையில் மரங்களைத்தான் குண்டு வீசி அழித்துவிட்டதாகப் பாகிஸ்தான் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது.

அந்த முதல் தகவல் அறிக்கையில், இந்திய விமானப்படையின் விமானங்கள் குண்டு வீசியதில் 19 பைன் மரங்கள் அழிக்கப்பட்டதாகவும், குண்டுவீசிச் சென்ற விமானிகள் யார் என்பது குறித்து அடையாளம் காணப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 14-ம் தேதி புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த மாதம் 26-ம் தேதி, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது முகாம்கள் மீது இந்திய விமானப்படையினர் குண்டு வீசி அழித்தனர், இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

ஆனால், இந்திய விமானப்படையினர் குண்டு வீசியது உண்மைதான், ஆனால், எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படவில்லை, வனப்பகுதியில் குண்டுவீசிவிட்டு சென்றனர், எந்தவிதமான கட்டமைப்பும் சேதமடையவில்லை என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் மேஜர் ஆசிப் கபூர் தெரிவித்தார்.

இதற்கிடையே பாலகோட் பகுதியில் பைன் மரங்கள் மீது குண்டு வீசி 19 மரங்களை அழித்ததாகவும், சூழல் அழிப்பு தீவிரவாதத்தில் இந்திய ராணுவம் ஈடுபடுகிறது என்று ஐ.நா.வில் பாகிஸ்தான் அரசு புகார் செய்திருந்தது. மேலும், குண்டு வீசிய அழிக்கப்பட்ட பகுதியில் விழுந்த மரங்கள், பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து ஐ.நா.விடம் அறிக்கை அளிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பாலகோட் வனப்பகுதியில் குண்டு வீசி மரங்களை அழித்ததாக இந்திய விமானப்படையின் அடையாளம் தெரியாத விமானிகள் மீது பாகிஸ்தான் வனத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்திய விமானப்படையின் குண்டுவீச்சில் யாரும் இறக்கவில்லை என்பதை மீண்டும் பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x