Published : 14 Mar 2019 06:09 PM
Last Updated : 14 Mar 2019 06:09 PM
அபிநந்தனின் புகைப்படம் மற்றும் அசத்தல் செய்தியோடு தேநீர் விற்பனை செய்யும் பாகிஸ்தான் டீக்கடை இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நடந்த விமானத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்டார். அங்கே கையில் தேநீருடனும் மனதில் தைரியத்துடனும் அவர் பேசிய வீடியோ, உலகம் முழுவதும் ட்ரெண்டானது.
அந்த வீடியோவில் எதிரி நாட்டிடம் பிடிபட்டாலும் நெஞ்சுரத்தோடு தமிழக விமானி அபிநந்தன் பேசுவார். பாகிஸ்தான் ராணுவம் கேட்கும் சில கேள்விகளுக்கு, 'மன்னிக்கவும் இதற்கு நான் பதிலளிக்கக் கூடாது!' என்று தெரிவிப்பார்.
அதேபோல பிடிபட்ட சமயத்தில் பாகிஸ்தான் ராணுவம், அபிநந்தனின் முகத்தில் ரத்தம் வழிய இழுத்துச் சென்றபோதும் நிமிர்ந்த நடையுடன் சென்றார்.
எதிரிகளிடம் இருப்பது தெரிந்தும் பயப்படாமல் துணிச்சலாகப் பேசிய தமிழர் அபிநந்தனுக்கு இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தானிலும் ரசிகர்கள் உருவாகினர். அவரின் பெயர் ஏராளமான குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டன. அவரின் மீசை இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள டீக்கடைக்காரர் ஒருவர், அபிநந்தனின் புகைப்படத்தோடு ஓர் அசத்தல் செய்தியை அச்சிட்டுள்ளார். இதன்மூலம் அவரின் தேநீர் விற்பனையை அதிகப்படுத்தி உள்ளார்.
அந்தச் செய்தி உருதுவில் எழுதப்பட்டுள்ளது. அதில், ''சுவையான தேநீர், இது எதிரியைக் கூட தோழனாக மாற்றும்'' என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. டீக்கடைக்காரரின் விளம்பர உத்தியைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT