Published : 02 Mar 2019 04:43 PM
Last Updated : 02 Mar 2019 04:43 PM

அபிநந்தனுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த பெண் அதிகாரி யார்?

பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமானை, அடாரி-வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கும் போது அருகே ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாகப் பாகிஸ்தான் பகுதிக்குள் மிக்ரக விமானம் மூலம் தாக்குதல் நடத்தச் சென்ற இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். சர்வதேச அளவில் நெருக்கடியாலும், இந்தியாவின் அழுத்தத்தாலும் அபிநந்தனை நேற்று இரவு 9.20 மணிக்கு அடாரி வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

அப்போது அபிநந்தனுடன் வந்த ஒரு பெண்ணைப் பார்த்த பலரும், அந்த பெண் அபிநந்தனின் மனைவியாக இருப்பார் என்று சந்தேகத்தினர். ஆனால், அந்த தகவல் முற்றிலும் பொய்யானது. அந்த பெண் பெயர் டாக்டர் பரேஹா பக்டி. பாகிஸ்தானின் அயல்நாட்டு விவகாரத்துறை அதிகாரி.

அதாவது இந்திய நிர்வாகத்தின்படி, ஐஎப்எஸ் அதிகாரிக்கு ஒப்பான பதவியில் இருப்பவர். பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தில் இந்திய விவகாரங்கள் பிரிவை பரேஹா பக்டி கவனித்து வருகிறார்.

அபிநந்தன் விவகாரத்தை மட்டும் பரிஹா பக்டி கவனிக்கவில்லை, பாகிஸ்தானை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்தியர் குல்பூஷண் யாதவ் வழக்கையும் பரேஹா பக்டிதான் கையாண்டு வருகிறார். குல்பூஷண் யாதவ் கடந்த ஆண்டு அவரின் தாய், மனைவியைச் சந்தித்தபோது, அவருடன் இருந்தவரும் பரேஹா பக்டி என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தில் மிகவும் முக்கியமான பெண் அதிகாரி பரேஹா பக்டி ஆவார். ஏனென்றால், இந்தியா, பாகிஸ்தான் விவராங்கள் என்றாலே பதற்றமான விஷயங்கள் இருக்கும். அது தொடர்பாக அனைத்து வழக்குகள், விவகாரங்களை பக்டி கவனித்து வருகிறார். புல்வாமா தாக்குதலுக்குப் பின் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றமான சூழல் நிலவியபோது, தனது சாதுரியமான நடவடிக்கையாலும், பேச்சுத்திறமையாலும் பதற்றத்தைத் தணித்துள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் பணியாற்றும் ஒரே பெண் அதிகாரி பரேஹா பக்டி ஆவார். பலூசிஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரேஹா பக்டி, கடந்த 2005-ம் ஆண்டு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை பணியில் சேர்ந்தார். இவரின் பேச்சாற்றல், நிர்வாகத் திறன் பல்வேறு தருணங்களில் புகழப்பட்டு, பாராட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x