Last Updated : 14 Mar, 2019 01:28 PM

 

Published : 14 Mar 2019 01:28 PM
Last Updated : 14 Mar 2019 01:28 PM

பாலியல் புகார்: போப் ஆண்டவரின் முன்னாள் நிதி ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை

பாலியல் புகார் வழக்கில் போப் ஆண்டவர் பிரான்சிஸின் முன்னாள் நிதி ஆலோசகர் கார்டினல் ஜார்ஜ் பெல்லுக்கு, 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சில் பாட வந்த இரண்டு சிறுவர்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில் வாடிகனின் மூத்த பாதிரியான ஜார்ஜ் பெல்லுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் கிடைப்பதற்கு முன் 3 ஆண்டுகள் 8 மாதங்கள் அவர்கள் கட்டாயம் சிறையில் இருந்தாக வேண்டும் என்று நீதிபதி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

போப் ஆண்டவர் பிரான்சிஸின்  முன்னாள் நிதி ஆலோசகர் கார்டினல் ஜார்ஜ் பெல். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் மெல்போர்ன் பேராயராக 1990-களில் பதவியேற்றார். அப்போது சர்ச்சுக்குப் பாட வந்த 13 வயது சிறுவனை அவர் பலாத்காரம் செய்ததாகவும், அதைக் கேட்க வந்த சிறுவனின் 13 வயது நண்பனையும் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது ஜார்ஜ் பெல், அளவுக்கு மீறி மது அருந்திய நிலையில் இருந்துள்ளார். சிறுவன் மன்றாடிக் கேட்ட பிறகும் அவனை அவர் விடவில்லை. இதுதொடர்பாக சுமார் 20 ஆண்டுகள் கழித்து, 2015-ல் பாதிக்கப்பட்ட சிறுவன்  விக்டோரியா காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், ஜார்ஜ் பெல் வேறு சில பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது.

முன்னதாகவே, ஜார்ஜ் பெல் மீதான தீர்ப்பு வெளியான நிலையில், நீதிமன்ற உத்தரவு காரணமாக ஊடகங்களில் இதுதொடர்பாக செய்தி வெளியாகவில்லை.

ஆனால் 77 வயதான ஜார்ஜ் பெல், இதைக் கடுமையாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக விக்டோரியா நீதிமன்றத்தில் ஜூன் 5-ம் தேதி மேல் முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x