Published : 01 Mar 2019 02:48 PM
Last Updated : 01 Mar 2019 02:48 PM

தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் மதத்துக்கு எதிரானது அல்ல: இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சு

தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது எந்த ஒரு மதத்துக்கும் எதிரானது அல்ல என இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தி அழித்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது.  அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் உயிருடன் கைது செய்தது.  இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அபுதாபியில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உட்பட பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இஸ்லாமிய நாடுகளிடையே ஒத்துழைப்பு, வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் இஸ்லாமிய நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள நிலையில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.

மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:

நீண்ட பாரம்பரியத்தை கொண்ட, அமைதி, அறிவு சார்ந்த சமூகத்தை கொண்ட மண்ணில் இருந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளேன். உலகின் பல்வேறு மதங்களைச் சேர்ந்த இந்த நாடு தற்போது உலகின் மிகப்பெரி பொருளாதார வலிமை கொண்ட நாடாக மாறி வருகிறது.

18.5 கோடி முஸ்லிம்கள் உட்பட 130 கோடி மக்கின் வாழ்த்துக்களுடன் இங்கு வந்துள்ளேன். எங்கள் முஸ்லிம் சகோதரர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்கள். கடந்த 4 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமல்லாமல், மேற்காசியாவின் வளைகுடா பகுதியுடன் எங்கள் உறவு, செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. வரலாறு திரும்புகிறது. நமது நாடுகளில் பலவும் ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கருப்பு நாட்களை சந்தித்தவை.

சுதந்திரத்துக்கு பிறகு ஒற்றுமை, நீதி, மரியாதை, வளம் கொண்ட நாடாக மாறிவருகிறோம். தீவிரவாதம் பல்வேறு பெயர்களில் வலம் வருகின்றன. தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. அனைத்து மதங்களுமே அமைதியை போதிக்கின்றன. இஸ்லாம் மதமும் அப்படி தான். கடவுள் என்பது ஒருவர் தான். ஆனால் பாதைகள் தான் வேறானவை.

இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.

முன்னதாக இந்த மாநாட்டில் பங்கேற்காமல் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்முத் குரேஷி புறக்கணித்துள்ளார். சுஷ்மா ஸ்வராஜை சந்திப்பதை தவிர்க்கவும், தர்மசங்கடமான சூழல் ஏற்படாமல் இருக்கவுமே பாகிஸ்தான் தரப்பில் இருந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதேசமயம் வெளியுறவுத்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x