Published : 25 Dec 2018 12:39 PM
Last Updated : 25 Dec 2018 12:39 PM
அமெரிக்காவில் ஷட்டவுன் மூன்றாவது நாளாக நீடித்து வரும் நிலையில், வெள்ளை மாளிகையில் தனியாக இருக்கிறேன் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அமெரிக்க உள்நாட்டுப்பாதுகாப்புக்கு வழி செய்யும் வகையிலும் சுவர் எழுப்ப அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டார். இதற்காக 500 கோடி டாலர் நிதி ஒதுக்கக் கோரினார்.
ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையிலும் அதிபர் ட்ரம்பின் கோரிக்கைக்கு ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் செவிசாய்க்கவில்லை. அதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். இதனால், இந்த நிதியாண்டுக்குச் செலவினத்துக்கான நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த இரு அவைகளிலும் இருந்த ஜனநாயகக்கட்சியினர் மறுத்துவிட்டனர்.
இதனால் அமெரிக்காவில் ஷட்டவுன் தொடங்கியது, தொடர்ந்து 3 –வது நாளை எட்டியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி ஷட்டவுன் தொடங்கியதால், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்த ஷட்டவுனை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் ட்ரம்ப் முயன்றுவருகிறார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக புளோரிடாவில் உள்ள மாரா ஏ லாகோ விடுதிக்குச் செல்வதைக் கூட அதிபர் ட்ரம்ப் ரத்து செய்து ஜனநாயகக் கட்சியினருடன் பேச்சு நடத்த ஆவலுடன் உள்ளார். ஆனால், ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட ட்விட்டில், “ நான் அமெரிக்க ஷட்டவுனை முடிவுக்குக் கொண்டுவர கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் அவர்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர். நான் வெள்ளை மாளிகையில் ஏழையைப் போல் தனியாக இருக்கிறேன். ஜனநாயகக் கட்சியினர் என்னுடன் வந்து பேச்சு நடத்துவார்கள் என காத்திருக்கிறேன். அமெரிக்க, மெக்சிகோ எல்லையில் பாதுகாப்புக்காக சுவர் அவசியம். ஆனால், அதிகமாகச் செலவாகும் என்று ஜனநாயகக்கட்சியினர்கூறுவது வேடிக்கையாக இருக்கிறது
நான் ஓவல் அலுவலகத்தில் அமர்ந்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பாகப் பணியாற்றி வருகிறேன். ஏற்கனவே நாம் ஏராளமான மைல்களுக்கு சுவரை எழுப்பிவிட்டோம், சில இடங்களில் முடிந்துவிட்டது. ஆதலால், செலவினநிதிக்கும் ஒப்புதல் அளித்து ஜனநாயகக்கட்சியினர் ஷட்டவுனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றும் வகையில் புகைப்படத்தையும் ட்விட்டரில் அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார். அதில், விரைவில் வடகொரியா அதிபர் கிம்முடன் நடைபெறவுள்ள சந்திப்புக்கு தயாராகி வருகிறேன் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே 63- ஆண்டு பாரம்பரியமான சான்டாவை(கிறிஸ்துமஸ் தாத்தா) கண்டுபிடிக்கக் குழந்தைகளுக்கு உதவும் நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்டுகுழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கூறி உதவினார். இந்த நிகழ்ச்சியில் மெலனியா டிரம்பும் கலந்து கொண்டு குழந்தைகளுடன் தொலைப்பேசியில் உரையாடினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT