Last Updated : 24 Sep, 2014 03:49 PM

 

Published : 24 Sep 2014 03:49 PM
Last Updated : 24 Sep 2014 03:49 PM

அமெரிக்க அரசின் கூட்டாளியா நாங்கள்?- அசாஞ்சே மீது கூகுள் பாய்ச்சல்

கூகுள் நிறுவனம், அமெரிக்க அரசின் உளவுக்கூட்டாளி என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே சாடியதை கடுமையாக மறுத்துள்ளார் கூகுள் தலைவர்.

மேலும், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பீதியின் பீடிப்பில் பேசுவதாக கூகுள் நிறுவனத் தலைவர் எரிக் ஷ்மிட் சாடியுள்ளார்.

அதாவது, இணையதளத்தின் வெளிப்படைத் தன்மை என்ற விவகாரத்தில் அமெரிக்க அரசின் கூட்டாளியே கூகுள் என்று அசாஞ்சே சாடியிருந்தார்.

அசாஞ்சே தனது “When Google met Wikileaks" என்ற புத்தகத்தில் கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகளை விவரிக்கையில் இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த நூலின் அறிமுகத்தையொட்டி கூகுள் தலைவர் எரிக் ஷ்மிட் கூறும்போது, “அசாஞ்சே பீதியின் பீடிப்பில் இவ்வாறு கூறுகிறார்” என்றார்.

அந்த நூலில் 2011ஆம் ஆண்டு கூகுள் தலைவர் ஷ்மிட்டை, அசாஞ்சே சந்தித்த தருணம் விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது கூகுள் என்பது ஒரு தனியார் தேசிய (அமெரிக்க) பாதுகாப்பு ஏஜென்சி என்று அசாஞ்சே கடுமையாகச் சாடியுள்ளார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த கூகுள் தலைவர், "அசாஞ்சே மிகவும் பீதியடைந்த மனநிலையில் பேசுகிறார், தேசிய பாதுகாப்பு ஏஜென்சியுடன் கூகுள் ஒருபோதும் கூட்டு சேர்ந்ததில்லை, மாறாக தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் செயல்பாடுகளை கூகுள் எதிர்த்து வந்துள்ளது" என்றார்.

மேலும், "தேசிய பாதுகாப்பு ஏஜென்சி தங்களது அனைத்து தரவுகளையும் எடுத்துக் கொண்டனர். முழுதும் என்கிரிப்ட் செய்யப்பட்ட தரவுகள். பரிமாற்றங்களை அரசு ஏஜென்சியைத் தவிர வேறு யாரும் அவ்வளவு எளிதாக எடுத்து விடமுடியாது. இதற்காக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சியுடன் கூகுள் போராடியே வருகிறது. கூட்டு சேரவில்லை" என்று தீவிரமாக மறுத்தார் கூகுள் தலைவர் ஷ்மிட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x