Published : 26 Nov 2018 09:51 AM
Last Updated : 26 Nov 2018 09:51 AM
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் குறித்தோ, திட்டம் தீட்டியது குறித்தோ அல்லது உதவியவர்கள் குறித்தோ தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.35 கோடி(50லட்சம் டாலர்கள்) பரிசு அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
2008-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. மும்பையில்கடல் வழியாக நுழைந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் ரயில் நிலையம், ஹோடட்ல் உள்ளிட்ட இடங்களில் நடத்திய தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் 9 பேரை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர். கசாப் என்ற தீவிரவாதி உயிருடன் பிடிபட்டு பின்னர் அவர் நீதிமன்றம் மூலம் தூக்கிலிடப்பட்டார்.
இந்நிலையில், மும்பை தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் ஆகியும், உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இது தொடர்பாக கடந்த இருவாரங்களுக்கு முன் பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றிருந்தபோது, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை சந்தித்து இதுதொடர்பாகப் பேசினார். அப்போது விரைவில் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்பட்டது. இந்தப் பேச்சின் முடிவில் அமெரிக்க இந்த வெகுமதியை அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
மும்பை தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை. உண்மைக் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. இந்தத் தாக்குதலுக்கு காரணமான இருக்கும் குறிப்பாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின்மீது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் விதித்த தடையை தீவிரமாகச் செயல்படுத்த அனைத்து நாடுகளுக்கும் கோரியுள்ளோம். குறிப்பாக பாகிஸ்தானுக்கு இதை வலியுறுத்துகிறோம். சர்வதேச நாடுகளுடன் இணைந்து, மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து நீதிமுன் நிறுத்த அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்படும்.
மும்பை தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்ளிட்ட 166 பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம்.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்தோ அல்லது சதித்திட்டம் தீட்டியவர்கள் குறித்தோ அல்லது உதவியவர்கள் குறித்தோ தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.35கோடி(50 லட்சம் டாலர்கள்) வெகுமதி அளிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் கடந்த 2012-ம ஆண்டு லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஹபிஸ் முகமது சயீத், ஹபிஸ் ரஹ்மான் மக்கி ஆகியோர் குறித்து தகவல் அளித்தார் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT