Published : 03 Oct 2018 01:48 PM
Last Updated : 03 Oct 2018 01:48 PM
நாங்கள் இல்லாமல் சவுதி அரேபிய மன்னரால் இரண்டு வாரங்களுக்கு பதவியில் நீடிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரான் மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.
மேலும், ஈரானை தனிமைப்படுத்தும் முயற்சியாக, அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருகிறது. இதனால் ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வர முடியாத சூழலில் அந்த இழப்பை ஈடுகட்ட, சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கூடுதலாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் இந்த வேண்டுகோளை சவுதி அரேபிய ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது. இதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் கோபமடைந்துள்ளார். மிசிஸிபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘சவுதி அரேபியா பல ஆண்டுகாலமாக அமெரக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது. மேற்காசியாவில் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு பிரச்சினைகளிலும் அமெரிக்காவுடன் கரம் கோர்த்து செயல்பட்டு வருகிறது. ஆனால் கச்சா எண்ணெய் விவகாரத்தில் சவுதி அரேபியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது கவலையளிக்கிறது.
அந்நாட்டின் பாதுகாப்புக்கு முழு பொறுப்பையும் அமெரிக்கா எடுத்துக் கொண்டுள்ளது. அமெரிக்கா இல்லாமல் சவுதி அரேபியாவால் நாட்டை பாதுகாக்க முடியாது. நாங்கள் இல்லாமல் அந்த நாடு நீடித்து இருக்க முடியாது. சவுதி மன்னர் சல்மான் பின் அப்துலஸிஸ் எனக்கு நல்ல நண்பர் தான். ஆனால் அமெரிக்கா இல்லாமல் இரண்டு வாரங்களுக்கு கூட அவரால் சவுதி மன்னர் பதவியில் நீடிக்க முடியாது’’ என ட்ரம்ப் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT