Last Updated : 20 Oct, 2018 10:46 AM

 

Published : 20 Oct 2018 10:46 AM
Last Updated : 20 Oct 2018 10:46 AM

கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஜமால்: முதன்முறையாக ஒப்புக் கொண்டது சவுதி அரேபியா

மாயமான பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி துருக்கியில் உள்ள தூதரகத்தில் கொலை செய்யப்பட்டதை சவுதி அரேபியா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக சவுதி அரேபியா தனது உளவு பிரிவு அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளது.

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜமால் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்டில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தார்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த வாரம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரத்தில் நாளுக்கு நாள் பல அதிர்ச்சியான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமால், விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம்சாட்டியது.

இதற்கான வீடியோ ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் துருக்கி கூறியது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதி அரேபியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட பல நாட்டு தலைவர்கள் கண்டித்துள்ளனர். இந்த நெருக்கடியை அடுத்த துருக்கி நாட்டின் இஸ்தான்புலில் உள்ள சவுதி தூதரகத்தில் ஜமால் கொலை செய்யப்பட்டதாக முதன் முறையாக சவுதி ஒப்புக்கொண்டுள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபியாவின் அட்டர்னி ஜெனரல் அல்- மஜாப் கூறுகையில் ‘சவுதி அரேபிய தூதரகத்தில் ஜமால் சந்திக்கச் சென்ற நபருடன் அவருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலில் ஜமால் இறந்திருக்கலாம். முதல்கட்ட விசாரணையில் இறுதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’’ எனக் கூறியுள்ளது. எனினும் அவரை யார் கொன்றது, அவரது உடல் எங்கே என்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து சவுதி அரேபியா தனது உளவுப்பிரிவு துணைத் தலைவர் அகமது அல்- அன்சாரி மற்றும் அரசின் ஊடக ஆலோசகர் சவுத் அல்- கதானி ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x