Published : 25 Aug 2018 03:18 PM
Last Updated : 25 Aug 2018 03:18 PM
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்க வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வரும் 30 ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் அகில இந்திய தலைவர்கள் கலந்துகொள்ளும் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ எனும் தலைப்பில் இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், பாஜக தலைவர் அமித் ஷாவும் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும், அமித் ஷா வருகையால், திமுக-பாஜகவுடன் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், “மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அகில இந்திய அளவில் நன்மதிப்பை பெற்றவர் என்பதால், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சியினர் நினைவேந்தலில் பங்கேற்கின்றனர். ஏற்கெனவே திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இஸ்லாமிய அமைப்புகள் என மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம்.
பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். இந்த அணி வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கும் தேர்தல் கூட்டணியாக மாறும், மாற வேண்டும் என்று விரும்புகிறோம்” என கூறினார்.
முன்னதாக நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தொல்.திருமாவளவன், “கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொள்வதை தேர்தல் அரசியலுடன் பார்க்க முடியாது. மதவாத சக்திகளுடன் திமுக கூட்டணி வைக்காது என நம்புகிறோம்” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT