Published : 24 Jul 2018 03:10 PM
Last Updated : 24 Jul 2018 03:10 PM
பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் கடந்த 22 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர். அவர்தான் அந்தப் பழங்குடி இனத்தின் கடைசி மனிதன்.
இவர் தொடர்பான வீடியோ ஒன்றுதான் தற்போது சமூக வலைதளங்களில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.
1970கள் மற்றும் 1980 களில் ஏஜெண்டுகள், நிலப்பிரபுக்கள் அமேசான் பகுதியிலிருந்த பழங்குடியினரைக் கொன்று அங்கிருந்து வெளியேற்றினர். அப்பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் மட்டும் உயிருடன் தப்பித்துள்ளார்.
தொடர்ந்து அங்கு வசித்து வரும் அவரை 1996 ஆம் ஆண்டு முதல் பிரேசிலில் செயல்பட்டு வரும் ஃபுனாய் என்ற அமைப்பு கடந்த 22 ஆண்டுகளாக கண்காணித்து தொடர்ந்து வீடியோ எடுத்து வருகிறது.
அந்த அமைப்புதான் தற்போது அவர் தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது,
அதில் வீடியோவில் கிட்டத்தட்ட 50 வயதிருக்கும் அந்தப் பழங்குடி மனிதர் நீண்ட அடர்ந்த முடியுடன் காணப்படுகிறார். கோடரியைக் கொண்டு மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருக்கிறார்.
மிக திடகாத்திரமான உடல்வாகுடன் இருக்கும் அந்த மனிதர் பன்றி, குரங்குகள், பறவைகளை தனது அம்பைக் கொண்டு வேட்டையாடி உண்டு வருவதாக ஃபுனாய் அமைப்பும் கூறியுள்ளது.
குழுவாக வாழும் சமூகத்திடம் இணைந்து வாழ அந்தப் பழங்குடி மனிதர் மறுத்துவிட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரேசில் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்படி, அந்த நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு அவர்கள் வசிக்கும் நிலத்தின் மீது உரிமை உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT