Last Updated : 03 Jul, 2018 05:38 PM

 

Published : 03 Jul 2018 05:38 PM
Last Updated : 03 Jul 2018 05:38 PM

சிறுவர்களை மீட்க சில மாதங்கள் ஆகும்: தாய்லாந்து ராணுவம்

குகையில் உயிருடன் கண்டுப்பிடிக்கப்பட்ட கால்பந்து சிறுவர் அணியை மீட்க சில மாதங்கள் ஆகும் என்று தாய்லாந்து ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டின் மா சே நகரில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16-வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்குள் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளரும் சென்றார்.

ஆனால், இவர்கள் சென்ற நாளில் இருந்து அங்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குகையைவிட்டு வெளியேற முடியவில்லை. குகைப்பகுதி முழுவதையும் வெள்ள நீர் சூழ்ந்தது.

இவர்களை  அணி நிர்வாகம் தேடியுள்ளது. பின்னர், தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். பிரிட்டிஷ் போன்ற சர்வதேச நாடுகளும் தாய்லாந்துக்கு  உதவிக்கரம் நீட்ட, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றது.

10 நாட்களுக்குப் பிறகு குகையில் சிக்கிக் கொண்டிருந்த கால்பந்து அணியின் சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும்  இருக்கும் இடத்தை  திங்கட்கிழமை கண்டுபிடித்தனர். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது.

இந்த  நிலையில் சிறுவர்களை மீட்க சில மாதங்கள் ஆகும் என்று தாய்லாந்து ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடற்படை தளபதி ஆனந்த் சுராவன் கூறும்போது, "நாங்கள் அவர்களுக்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கு தேவையான உணவை வழங்க திட்டமிட்டிருக்கிறோம். அங்கிருக்கும் யாருக்கும் நீச்சல் தெரியவில்லை. 13 பேரும் தண்ணீரில் நீச்சல்  அடிக்க கற்க வேண்டும்  அல்லது குகையிலுள்ள தண்ணீர் வற்றும்வரை காத்திருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

சிறுவர்களை மீட்கும் முயற்சியில் 1000க்கும் மேற்பட்ட தாய்லாந்து ராணுவத்தினரும், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்களும் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x